Last Updated : 21 Aug, 2015 08:18 AM

 

Published : 21 Aug 2015 08:18 AM
Last Updated : 21 Aug 2015 08:18 AM

பிரிவினைவாதிகளுடன் பாகிஸ்தான் ஆலோசனை நடத்தினாலும் இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் நடக்கும்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

‘‘இந்தியா - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும்’’ என்று மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் வரும் 23, 24-ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. ஆனால், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்கு தல் நடத்துவது, காஷ்மீர் பிரி வினைவாதிகளுக்கு பாகிஸ்தான் தூதர் அழைப்பு விடுத்திருப்பது போன்ற காரணங்களால் கூட் டத்தை மத்திய அரசு ரத்து செய் யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தீவிரவாதம், அதை தடுக்கும் வழிகளை பற்றி ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். அதற்காகத்தான் இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதை சீர்குலைக்கும் வகையில், காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் தூதர் அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், திட்டமிட்டப்படி பாதுகாப்பு ஆலாசகர்கள் கூட்டம் நடக்கும்.

இந்தக் கூட்டத்தை நடத்தும் முடிவு, ரஷ்யாவின் உஃபா நகரில் பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து பேசியபோது எடுக்கப்பட்டது.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்தியா - பாகிஸ்தான் நாட்டு வெளி யுறவுத் துறை செயலர்கள் அளவிலான கூட்டம் நடைபெற இருந்தது. அதற்கு முன்னதாக பேச்சுவார்த்தை நடத்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு பாகிஸ்தான் தூதர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, அந்தக் கூட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாடுகளின் நிர்பந்தம் காரணமா?

தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்னதாக பிரிவினைவாதிகளுடன் ஆலோசனை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. பிரிவினைவாதிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட் டுள்ளனர். இது, பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தை இரு நாடுகளும் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. ஆனால், இந்தியா - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என மத்திய அரசு கூறுகிறது. ஏனெனில், சர்வதேச நாடுகளின் நெருக்கடியால் கூட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இரு நாடுகளும் இருக்கின்றன. இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மனீஷ் திவாரி கூறும்போது, “சர்வதேச நாடுகளின் நிர்பந்தத்தால் இரு நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டம் டெல்லியில் நடக்கிறதா என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x