Last Updated : 17 Jan, 2020 09:57 AM

 

Published : 17 Jan 2020 09:57 AM
Last Updated : 17 Jan 2020 09:57 AM

காவிரி டெல்டாவின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க 5-வது ஏல அறிவிப்பு

நாட்டின் பல்வேறு மாநிலங்களை போல், தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏலம் விடப்பட்டு வருகிறது. ஓஏஎல்பி (Open Acreage Licensing Programme) எனும் முறையில் விடப்படும் இந்த ஏலங்களை மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம்(டிஜிஎச்) விடுகிறது. இதுவரை விடப்பட்ட ஓஏஎல்பி வகையின் நான்கு ஏலங்களில் தமிழகத்தில் ஆறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில், காவிரி டெல்டாவின் நான்கு நிலப்பகுதியும், ஆழம் குறைந்த கடல் பகுதி ஒன்றும் பெற்றுள்ளன.

இதற்கு தமிழகத்தின் விவசாயிகள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினர் இடையே கடும் எதிர்ப்பு நிலவுகிறது.இந்நிலையில், ஓஏஎல்பியின் ஐந்தாவது ஏல அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வரும் மார்ச் 18 வரை விண்ணப்பிக்கலாம். இதன் 11 பகுதிகளின் அளவு 19,789.04 சதுர கி.மீ. ஆகும். இதில், எட்டு நிலப்பகுதியும், மூன்று ஆழ்கடல் பகுதியும் இடம்பெற்றுள்ளன. மூன்று ஆழ்கடல் பகுதியில் ஒன்றாக காவிரி டெல்டாவின் காரைக்கால் மற்றும் புதுச்சேரிக்கு இடையே உள்ள பகுதி அமைந்துள்ளது. இதன் அளவு 4,064.22 சதுர கி.மீ. ஆகும்.

இது, ஹைட்ரோகார்பனுக்காக காவிரி டெல்டாவில் முதன்முறையாக அறிவிக்கப்பட்டுள்ள ஆழ்கடல் பகுதி, நிலப்பகுதியை போல் இதற்கு பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தத் தேவையில்லை. இதனால், ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் அதிக சிக்கல் இருக்காது எனக் கருதப்படுகிறது. எனினும், ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் மீன்பிடி தொழிலுக்கு சிக்கல் உருவாகுமா என்ற அச்சம் எழத் துவங்கி உள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’நாளேட்டிடம் ஹைட்ரோகார்பன் ஆர்வலரான வி.சேதுராமன் கூறும்போது, ‘‘புவிவெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம், கச்சா எண்ணெயும் நிலக்கரியும் என சர்வதேச அளவில் புகார் உள்ளது. இந்த சூழலில், ஓஏஎல்பி 5-ல் இடம்பெற்றுள்ள ஆழ்கடலில் தமிழகப் பகுதிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. இங்கு அமையும் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் நம் மீனவர்கள் பாதிக்கப்படுவார்களா என தமிழக அரசு முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்தார்

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான எதிர்ப்பினால் இது வரையும் விடப்பட்டஏலப்பகுதிகளில் முறையாக பணிகள் துவக்கப்படவில்லை. ஓஏஎல்பியின் முதல் ஏலத்தில் தமிழகத்தில் வேதாந்தா நிறுவனம்எடுத்த இரண்டு பகுதிகளிலும் கூட இன்னும் பணிகள் துவக்கப்படவில்லை. தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது. நாடு முழுவதிலும் ஓஏஎல்பியின் நான்கு ஏலங்களில் இதுவரை 94 பகுதிகள் ஏலம் விடப்பட்டுள்ளன. இதில் மிக அதிகமாக 51 பகுதிகளை ஏலம் எடுத்த நிறுவனமாக வேதாந்தா உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x