Last Updated : 21 Aug, 2015 11:03 AM

 

Published : 21 Aug 2015 11:03 AM
Last Updated : 21 Aug 2015 11:03 AM

கருப்பு பணம் பதுக்கலை தடுக்க சீசெல்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம்: பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

கருப்பு பணம் பதுக்கலை தடுக்கவும், இதுதொடர்பாக தகவல்களை பரிமாறிக் கொள்ள சீசெல்ஸ் நாட்டுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு வங்கிகளில் பலர் பணம் பதுக்கி உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகளின் வங்கிகளில் இந்தி யர்கள் பதுக்கி உள்ள கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், சீசெல்ஸ் நாட்டுடன் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், அந்த நாட்டுடன் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. குறிப்பாக கருப்பு பணம் பதுக்கலை தடுக்க, சீசெல்ஸ் நாட்டுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் வரி விதிப்பை தவிர்க்க சீசெல்ஸ் நாட்டில் வங்கிகளில் செலுத்தப்படும் பணம் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். முன்னதாக இதுபோன்ற ஒப்பந்தத்தை மேற்கொள்ள இரு நாட்டு பிரதிநிதிகளுக்கு இடையில் கடந்த ஜூன் மாதம் 8, 9-ம் தேதிகளில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், வரி தொடர்பான தகவல்களை இரு நாடுகளும் பரிமாறி கொள்ளும். இதன் மூலம் வரி ஏய்ப்பையும், கருப்பு பணம் பதுக்கலையும் தடுக்க முடியும் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தப்படி பெறப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர், அதிகாரிகள், நீதிமன்றம், அமலாக்கத் துறையினர் தவிர வேறு யாருக்கும் இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ளும் தகவல்கள் தெரியப்படுத்தமாட்டாது.

இதேபோல், வரி தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வகையில், அர்ஜென்டினா, பகாமாஸ், பக்ரைன், பெர்முடா, கேமேன் தீவு, ஜிப்ரால்டர், ஜெர்சி, லைபீரியா, மொனாகோ, சான் மரினோ உட்பட பல நாடுகளுடன் இந்தியா ஏற்கெனவே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x