Last Updated : 30 Dec, 2019 12:06 PM

 

Published : 30 Dec 2019 12:06 PM
Last Updated : 30 Dec 2019 12:06 PM

மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தல்: பேராசிரியருக்குக் கட்டாய ஓய்வளிக்க ஐஐடி கான்பூர் நிர்வாகம் முடிவு

வெளிநாட்டு மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த ஐஐடி கான்பூர் பேராசிரியருக்குக் கட்டாய ஓய்வளிக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இயக்குநர்கள் குழு மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐஐடி வட்டாரங்கள் கூறும்போது, ''கடந்த செப்டம்பர் மாதம் இந்த நிகழ்வு நடந்துள்ளது. மூத்த பேராசிரியர் ஒருவர் குறித்து வெளிநாட்டு மாணவி புகார் அளித்துள்ளார். ஆரம்பத்தில் இந்த விவகாரத்தை மூடி மறைக்கவே ஐஐடி நிர்வாகம் முயன்றது. எனினும் இந்த விவகாரத்தை பெண்கள் பிரிவுக்கு மாணவி கொண்டு சென்றுள்ளார். தன்னுடைய தூதரகத்துக்கும் புகாரை அனுப்பியுள்ளார்.

தூதரகத்தின் தலையீட்டுக்குப் பிறகு, ஐஐடி சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பிற வெளிநாட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோர் விசாரிக்கப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளும் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

3 மாத விசாரணைக்குப் பிறகு, புகார் உண்மையானது என்று தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து உயர்மட்டக் குழு, குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியருக்குக் கட்டாய ஓய்வை அளித்துள்ளது. இனி இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

மூத்த பேராசிரியரின் கட்டாய ஓய்வுக்கான பணிகள் தொடங்கியுள்ளன'' என்று தெரிவித்தன.

ஐஐடி கான்பூர் வரலாற்றிலேயே இத்தகைய சம்பவம் நிகழ்வது இதுவே முதல் முறையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x