Last Updated : 30 Dec, 2019 11:31 AM

 

Published : 30 Dec 2019 11:31 AM
Last Updated : 30 Dec 2019 11:31 AM

என்ஆர்சி விவகாரத்தில் சோனியா காந்தி மவுனம் ஏன்? என்ஆர்சியின் தொடக்கமே என்பிஆர்: பிரசாந்த் கிஷோர் காட்டம்

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதுவரை எந்தவிதமான கருத்தும் ஏன் தெரிவிக்கவில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவரும், அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டெல்லியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''என்ஆர்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு அறிக்கை வெளியிட்டால் கூட காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்துத் தெளிவு கிடைத்துவிடும். தர்ணா, போராட்டங்கள் அனைத்தையும் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், சோனியா காந்தி இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வமான அறிக்கையையும் வெளியிடாதது ஏன்? என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: கோப்புப்படம்

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் உள்ள அனைத்து முதல்வர்களும் என்ஆர்சியை அமல்படுத்தக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அல்லது காங்கிரஸ் காரியக் கமிட்டி உத்தரவிட வேண்டும்.

இதுவரை என்ஆர்சியை தங்கள் மாநிலத்துக்குள் கொண்டுவர அனுமதிக்கமாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியின் ஒரு முதல்வர் மட்டுமே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள் யாரும் எந்த முடிவும் எடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள் அல்ல, காங்கிரஸ் காரியக் கமிட்டிதான் முழு அதிகாரம் படைத்தது.

நான் கேட்பதெல்லாம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதுவரை என்ஆர்சி குறித்து எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் என்ஆர்சி கொண்டுவரப்படாது என்று தெரிவிக்கவில்லை.

அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதே என்ஆர்சி சட்டத்தைத் திருத்தம் செய்யும் வாய்ப்பு இருந்தும் அதை ஏன் திருத்தவில்லை என்பது முக்கியக் கேள்வியாகும். குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2003-ம் ஆண்டு திருத்தப்பட்டது.

2004 முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சிதான் மத்தியில் ஆட்சியில் இருந்தது. இந்தச் சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானதாக இருந்தால், ஏன் அப்போதே காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு இருந்தும் அதைத் திருத்தவில்லை.

என்ஆர்சிக்கும், என்பிஆருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். ஆனால் இது வேடிக்கையாக இருக்கிறது. என்ஆர்சிக்கும், என்பிஆருக்கும் தொடர்பு இருப்பதை அந்த ஆவணங்களே சொல்கின்றன. என்ஆர்சியின் முதல் நடவடிக்கைதான் என்பிஆர். ஒட்டுமொத்த என்ஆர்சியும், என்பிஆரும், குடியுரிமை மசோதா2003-வோடு தொடர்புடையது, விவாதத்துக்கு உரியது.

பாஜக தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா: கோப்புப்படம்

என்ஆர்சி குறித்து மேற்கு வங்கத்தில் தேர்தல் நேரத்தில் மத்திய அரசு வட்டாரங்களில் பெரும்பாலானோர் பேசினார்கள். ஆனால், உள்துறை அமைச்சரோ என்ஆர்சிக்கும், என்பிஆருக்கும் தொடர்பில்லை என்று கூறுகிறார்.

என்சிஆரின் துணை நடவடிக்கைதான் என்பிஆர். மத்திய அரசு என்ன சொல்லப்போகிறது. என்பிஆர் மட்டும் கணக்கெடுப்பு நடத்தி, என்ஆர்சி கொண்டுவரமாட்டோம் என்று மத்திய அரசு சொல்லப்போகிறதா? ஆனால், செயல்பாட்டு முறையில், அரசு ஆவணங்கள் படி, என்சிஆரின் முன் தேவைப்படும் ஆவணம்தான் என்பிஆர். அரசின் ஆவணங்கள் படி இரண்டும் தொடர்பு உண்டு''.

இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x