Last Updated : 12 Dec, 2019 07:31 PM

 

Published : 12 Dec 2019 07:31 PM
Last Updated : 12 Dec 2019 07:31 PM

நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை கைதியின் சீராய்வு மனு வரும் 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப் பலாத்காரத்தால் கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளில் ஒருவர் தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி சீராய்வு மனுத் தாக்கல் செய்தார். இம்மனு வரும் 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு, 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்திலிருந்து கீழே வீசப்பட்டார். அவரின் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த மாணவி சிங்கப்பூருக்கு மருத்துவச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் 2012, டிசம்பர் 29-ம் தேதி அந்த மாணவி உயிரிழந்தார்

மாணவியைப் பலாத்காரம் செய்த ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மற்றும் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு நிர்பயா வழக்கு என்று கூறப்பட்டு வந்தது.

இவர்களில் ராம்சிங், திஹார் சிறையில் 2013-ம் ஆண்டு, மார்ச் மாதம் 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். நிர்பயா வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. கடந்த 2018-ம் ஆண்டு, ஜூலை 9-ம் தேதி இந்த 4 குற்றவாளிகளில் முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா ஆகிய 3 பேர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆனால், வழக்கில் 4-வது குற்றவாளியான அக்ஷய் குமார் சிங் மட்டும் சீராய்வு மனுத் தாக்கல் செய்யாமல் இருந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி அக்ஷய் குமார் சிங் சார்பில் அவரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில் " வாழும் நாட்கள் குறைந்து கொண்டே செல்லும் போது எதற்கு தூக்கு தண்டனை. பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோர், தீவிரவாதத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்து ஒரு அரசு எளிதாகத் தூக்கிலிட முடியும். ஆனால், குற்றம் செய்தவர்களைத்தான் கொல்ல முடியுமே தவிர, குற்றத்தைக் குறைக்க முடியாது.

தூக்கு தண்டனை என்பதே ரத்தத்தை உறைய வைக்கும் கொலைதான். குற்றவாளிகள் திருந்துவதற்கு வாய்ப்பு இல்லை. இந்த தண்டனைகளால் குற்றங்கள் குறைந்துவிடும் என்பதற்கான எந்தவிதமான தடுப்பு மதிப்புகளும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அக்ஷய் குமார் சிங்கின் சீராய்வு மனு வரும் 17-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x