Published : 12 Dec 2019 08:17 AM
Last Updated : 12 Dec 2019 08:17 AM

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு; அசாம், திரிபுராவில் போராட்டம்: விமான நிலையத்தில் சிக்கிய முதல்வர் சர்பானந்தா

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், குவாஹாட்டி விமானநிலையத்தில் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் சிறிது நேரம் சிக்கிக் கொண்டார்.

அசாம், திரிபுரா, நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் அசாம் மாநிலம் தேஜ்பூருக்குச் செல்வதற்காக நேற்று குவாஹாட்டியிலுள்ள லோக் பிரியா கோபிநாத் போர்டோலாய் சர்வதேச விமானநிலையத்துக்கு முதல்வர் சர்பானந்தா சோனோ வால் வந்தார். ஆனால் விமான நிலையத்துக்கு வெளியே போராட் டங்கள் நடைபெற்றதால் அவரால் வெளியே செல்லமுடியவில்லை. விமான நிலையத்திலேயே சிறிது நேரம் அவர் சிக்கிக்கொண்டார். பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் தேஜ்பூர் புறப்பட்டுச் சென்றார்.

இன்டர்நெட் சேவை ரத்து

போராட்டங்கள் காரணமாக அசாமிலுள்ள 10 மாவட்டங்களில் நேற்று இரவு 7 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு இன்டர்நெட் சேவையை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரவுவதைத் தடுக்கவும், அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதைத் தடுக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

லக்கிம்பூர், தேமாஜி, டின் சுக்கியா, திப்ருகர், சரய்தியோ, சிவசாகர், ஜோர்ஹத், கோலாகட், காம்ரூப் (மெட்ரோ), காம்ரூப் ஆகிய மாவட்டங்களில் இன்டர் நெட் சேவை ரத்து செய்யப்பட் டுள்ளது.

இதுதொடர்பாக அசாம் மாநில கூடுதல் தலைமைச் செயலர் குமார் சஞ்சய் கிருஷ்ணா கூறும்போது, “பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் பரவுவதைத் தடுக்கவே இன்டர்நெட் சேவையை ரத்து செய்தோம். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கட்டுக் குள் வைக்க அனைத்து நட வடிக்கைகளையும் எடுத்துள் ளோம்” என்றார்.

10 ஆயிரம் பேர்

அசாமின் முக்கிய நகரங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் போராட்டத்தில் நேற்று ஈடு பட்டனர். சிலர் வன்முறையிலும் ஈடுபட்டனர். சில இடங்களில் வாகன டயர்களை எரித்தும் அவர்கள் தங்க ளது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர் கள் பெரும்பாலும் மாணவர்கள் என போலீஸார் தெரிவித்தனர்.

போராட்ட கும்பலைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். சில இடங்களில் தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனர்.

5 ஆயிரம் துணை ராணுவத்தினர்

இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் சட்டம், ஒழுங்கை கட்டுக்குள் வைக்க 5 ஆயிரம் துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். குறிப் பாக போராட்டம் அதிகமாக நடைபெற்று வரும் அசாமின் முக்கிய பகுதிகளில் அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 50 கம்பெனி துணை ராணுவப் படையினர் வடகிழக்கு மாநிலங்களுக்கு வந்துள்ளனர்.

காஷ்மீரிலிருந்து 20 கம்பெனி துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மீத முள்ள 30 கம்பெனி துணை ராணுவப் படையினர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎப்), எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்), சஷஸ்த்ரா சீமா பால் (எஸ்எஸ்பி) படையினரும் அடக்கம். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x