Published : 03 Dec 2019 11:14 AM
Last Updated : 03 Dec 2019 11:14 AM

நாசாவுக்கு உதவிய தமிழக இன்ஜினியர்: விக்ரம் லேண்டரின் மோதி உடைந்த பாகம் கண்டுபிடிப்பு

விக்ரம் லேண்டர் மோதி உடைந்த பாகங்களை கண்டுபிடிக்க தமிழகத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் உதவியுள்ள விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆராய, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஜூலை 22-ம்தேதி விண்ணில் செலுத்தியது. கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதிதிட்டமிட்டபடி லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்தது.

ஆனால் கடைசிநிமிடத்தில் பாதை மாறி வேகமாகசென்று நிலவில் விழுந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேகமாகச் சென்று நிலவின் தரையில் லேண்டர் மோதியதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், விக்ரம் லேண்டரின் மோதிய பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசாவின் ஆர்பிட்டர் கேமிரா, விக்ரம் லேண்டர் நிலவில் இறங்க முயற்சித்தற்கு முன்பும், நிலவில் மோதிய பின்பும் தரை பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களை படம் பிடித்துள்ளது.

தமிழக இன்ஜினியர்

விக்ரம் லேண்டர் மோதி உடைந்த பாகங்களை கண்டுபிடிக்க தமிழகத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் உதவியுள்ள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. தொழில்நுட்பத்துறை இன்ஜினியராக சென்னையில் பணியாற்றி வரும் சண்முக சுப்பிரமணியன் விக்ரம் லேண்டர் தொடர்பாக நாசா வெளியிட்டு வரும் புகைப்படங்களை ஆய்வு செய்து கடந்த அக்டோபர் மாதம், இந்தப் பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்திருக்கலாம் என நாசா மற்றும் இஸ்ரோவுக்கு சண்முக சுப்பிரமணியன் தகவல் அனுப்பியுள்ளார்.

அதன் பின்னர் நாசாவின் நிலவை ஆய்வு செய்யும் டீம் குறிப்பிட்ட அந்தப் பகுதியில் கூடுதல் ஆய்வு நடத்தி தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சண்முக சுப்பிரமணியன் கொடுத்த தகவலின் அடிப்படையில், நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் விக்ரம் லேண்டரின் பாகங்கள் விழுந்த இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அந்த புகைப்படத்தில் உள்ள பச்சை நிறப் புள்ளிகள் லேண்டரின் சிதைவுகளை குறிப்பதாகவும், நீல நிற புள்ளிகள் லேண்டரின் பாகங்கள் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்தை குறிப்பதாகவும் நாசா கூறி உள்ளது. இதற்காக சண்முக சுப்பிரமணியனுக்கு நாசா சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ‘‘விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களைக் கண்டுபிடிக்க உதவியதற்கு நன்றி.. நாசாவின் LROC டீம்(நிலவை ஆய்வு செய்யும் நாசா குழு) குறிப்பிட்ட அந்த இடத்தில் சில பாகங்கள் இருந்ததை கண்டுபிடிக்க முடிந்தது. உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சண்முக சுப்பிரமணியன், சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x