Published : 29 Nov 2019 10:41 AM
Last Updated : 29 Nov 2019 10:41 AM

ஹைதராபாத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட பெண் எரித்துக் கொலை: எரிந்த நிலையில் உடல் கண்டெடுப்பால் அதிர்ச்சி 

ஹைதராபாத்தில் விலங்குகள் நல மருத்துவரான பெண் ஒருவர் காணாமல் போனதாக பெற்றோர் போலீஸில் புகார் அளித்த நிலையில் அவரது உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் குடும்பத்தினர் பேரதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் உடல் எரிந்து போய் மோசமான நிலையில் பெற்றோர் உதவியுடன் அடையாளம் காணப்பட்டது.

ஷாத்நகரில் உள்ள தன் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு பணிக்காக தன் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட இந்தப் பெண் பணி முடிந்து வீடு திரும்பும்போது இருசக்கர வாகனம் பஞ்ச்சர் ஆனதாக தெரிகிறது, இதனால் ஷாம்சாபாத் பகுதியிலிருந்து அவர் புதன் இரவு தன் சகோதரிக்கு போன் மூலம் வண்டி பஞ்சர் ஆன விஷயத்தைத் தெரிவித்துள்ளார்.

போலீஸ் தரப்பில் கூறப்படுவது என்னவெனில், புதன் மாலை மருத்துவமனையிலிருந்து திரும்பிய பிரியங்கா மீண்டும் மாலை 5.50மணிக்கு இன்னொரு கிளினிக்குக்கு சென்றுள்ளார். ஷாம்சாபாத் சுங்கவரி பிளாசா அருகே தன் வண்டியை நிறுத்தி விட்டு ‘கேப்’ ஒன்றில் புறப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இரவு 9.22 மணியளவில் தனக்கு பிரியங்காவிடமிருந்து போன் வந்ததாகக் கூறிய அவரது சகோதரி, ஸ்கூட்டர் பஞ்சர் ஆகிவிட்டதாகவும் அதனை சரி செய்து தருவதாக ஒருவர் வண்டியை எடுத்துச் சென்றதாகவும் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.

வண்டியை பஞ்சர் ஒட்டித் தருகிறேன் என்று எடுத்துச் சென்ற நபர் அனைத்து கடைகளும் மூடிவிட்டது வேறு இடத்தில் ரிப்பேர் செய்து தருகிறேன் என்று கூறிய அந்தப் பெண் அருகே லாரியில் சிலபேர் இருப்பதால் தனக்கு மிகவும் பயமாக இருப்பதாகவும் சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இந்த போனை அடுத்து மீண்டும் சகோதரிக்கு போன் செய்த போது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்துதான் குடும்பத்தினர் போலீஸிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல் ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கிடந்துள்ளது. சுங்கச்சாவடியில் இவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்த இடத்திலிருந்து உடல் கிடந்த இடம் 25 கிமீ தூரம்.

சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்ஜனார் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அரசு ஊழியரான அவரது தந்தை, “யார் இதைச் செய்திருந்தாலும் தூக்கில் தொங்க விடப்பட வேண்டும்” என்று குமுறியுள்ளார்.

ட்விட்டர்வாசிகளும் இந்த கொலையினால் கொந்தளிப்படைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x