Published : 21 Aug 2015 12:40 PM
Last Updated : 21 Aug 2015 12:40 PM

சன் குழும சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சன் டிவி-க்கு சொந்தமான ரூ.742 கோடி சொத்துகளை முடக்க தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கின் ஒரு பகுதியாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி மற்றும் சன் டிவி நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.742 கோடி சொத்துகளை முடக்கி, அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு 180 நாட்களுக்குள் அமலாக்கப் பிரிவின் உயர் அதிகாரியால் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது நடைமுறை. அவர் சொத்து முடக்கத்தை உறுதி செய்யும் முன், இச்சொத்துகள் இவ்வழக்கு விசாரணைக்கு தொடர்புடையவைதான் என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்நிலை யில், சொத்து முடக்கத்தை உறுதி செய்வதை எதிர்த்து சன் டிவி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தால் கண்காணிக்கப்படும் 2ஜி வழக்குடன் தொடர்புடையது என்பதால், தடை விதிக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து சன் டிவி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி அமிதவா ராய் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. 2ஜி வழக்கில் சிபிஐ சார்பில் ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் ஆஜராகி, ‘சன் டிவி-க்கு எதிரான சொத்து முடக்கத்துக்கு தடை விதிப்பதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், 180 நாட்களுக்குள் சொத்து முடக்கம் தொடர்பான உத்தரவு காலாவதி ஆகிவிடாமல் இருப்பதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்’ என்று வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சன் டிவி-யின் சொத்துகள் முடக்கத்தை உறுதி செய்வதற்கு தடை விதித்ததுடன், 180 நாட்கள்

கடந்தாலும், சொத்து முடக்கம் குறித்து உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவித்தனர். இதுகுறித்த பிரதான வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x