Last Updated : 22 Nov, 2019 04:20 PM

 

Published : 22 Nov 2019 04:20 PM
Last Updated : 22 Nov 2019 04:20 PM

முஸ்லிம்களுக்கு சமவாய்ப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும்: மக்களவையில் டி.ரவிகுமார் வலியுறுத்தல்

புதுடெல்லி

முஸ்லிம்களுக்கான சமவாய்ப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும் என திமுக எம்.பி டி.ரவிகுமார் மக்களவையில் இன்று வலியுறுத்தினார்.

இது குறித்து விழுப்புரம் தொகுதி எம்.பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான டி.ரவிக்குமார் பூஜ்ஜிய நேரத்தில் பேசியதாவது:

‘‘முஸ்லிம்களுக்கு சமவாய்ப்புகள் வழங்குவதற்காக சமவாய்ப்பு ஆணையம் ஒன்றை அமைக்கவேண்டும் என நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையிலான குழு பரிந்துரைத்தது.

இந்த ஆணையத்தை உருவாக்க என காங்கிரஸ் அரசு 20.02.2014 இல் முடிவுசெய்தது. ஆனால் அதன்பின்னர் பதவியேற்ற பாஜக அரசு அந்த முடிவை ரத்துசெய்துவிட்டது. எனவே, சமவாய்ப்பு ஆணையத்தை உடனடியாக உருவாக்கவேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என அவர் தெரிவித்தார்.

மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் இன்று ரவிகுமார் மற்றொரு பிரச்சனையையும் எழுப்பினார். அதில் அவர், விவசாயக் கூலி தொழிலாளர் பாதுகாப்பு பற்றி பேசினார்.

இது குறித்து ரவிகுமார் பேசும்போது, ‘‘இந்தியாவில் சுமார் 26.3 கோடி விவசாயத் தொழிலாளர்கள் இருப்பதாக 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அவர்களில் பலர் வேலைதேடி உள்நாட்டிலேயே பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்கின்றனர்.

இதனால், அவர்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதோடு, குடும்பமும் சிதைகிறது. எனவே, விவசாயத் தொழிலாளர்களின் நலன் காக்க கொள்கை ஒன்றை மத்திய அரசு உருவாக்கவேண்டும்’’எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x