Published : 09 Nov 2019 01:25 PM
Last Updated : 09 Nov 2019 01:25 PM
புதுடெல்லி
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாகவும் பார்க்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உச்ச நீதிமன்றம் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை யாரும் தனிப்பட்ட வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ பார்க்கக் கூடாது. அமைதியும் நல்லிணக்கமும் நிலவட்டும்.
ராமர் பக்தி, ரஹிம் பக்தியைவிட, நாம் நமது தேச பக்தியை வலுவாக்க வேண்டியது கட்டாயம்.
இன்றைய தீர்ப்பை ஒட்டி 130 கோடி இந்தியர்கள் கடைபிடித்த அமைதியானது இந்தியர்களின் ஒத்துழைத்து வாழும் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.
பல ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றம் சுமுகமான தீர்ப்பை வழங்கியுள்ளது. வழக்கு விசாரணையின்போது, ஒவ்வொரு தரப்புக்கும், ஒவ்வொருவரின் கருத்துக்கும் போதிய நேரமும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை இன்னும் அதிகரிக்கும்.
அயோத்தி தீர்ப்பு கவனிக்கத்தக்கது. ஏனெனில் அது எந்த ஒரு சர்ச்சையையும் சட்ட ரீதியாக சுமுகமாகத் தீர்க்கலாம் என்பதை நிலைநாட்டியுள்ளது. நமது நீதித்துறையின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் தொலைதூரப் பார்வையை வலியுறுத்தியுள்ளது. மேலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT