Published : 05 Nov 2019 03:36 PM
Last Updated : 05 Nov 2019 03:36 PM

நாட்டுப் பசும்பாலில் தங்கம் இருக்கிறது: மேற்குவங்க பாஜக தலைவரின் பேச்சால் சர்ச்சை

புர்த்வான்

நாட்டுப் பசும்பாலில் தங்கம் இருக்கிறது என மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியிருப்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்குவங்க மாநில பாஜக தலைவர் புர்த்வான் எனுமிடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "சிலர் மெத்தப் படித்தவர்கள் என்று பெருமை பேசிக் கொண்டு சாலையோரக் கடைகளில் மாட்டிறைச்சி சாப்பிடுகின்றனர். ஏன் பசுமாட்டிறைச்சி சாப்பிடுகிறீர்கள்? நாய்க்கறிகூட சாப்பிடலாமே! அதுவும் உடலுக்கு நல்லதுதான். நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். அதை உங்களின் வீட்டுக்குள் செய்யுங்கள்.

பசுமாடு எங்களின் தெய்வம். அதனை அவமதிப்பதை, கொல்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

நாட்டுப் பசும்பாலில் தங்கம் இருக்கிறது. அதனாலேயே அது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. நாட்டுப் பசுமாட்டின் காம்பில் சூரியஒளி படும்போது பாலில் தங்கம் உருவாகிறது.

இந்தியா கிருஷ்ணரின் பூமி. இங்கு நாங்கள் பசுவை மதிக்கிறோம். இனியும் அப்படித்தான் இருப்போம். பசுவதை பெருங்குற்றம்.

குழந்தைகள் தாய்ப்பாலுக்குப் பின்னர் பசும் பாலையே குடிக்கின்றனர். தாயாக விளங்கும் பசுவை வதை செய்தால் எப்படிப் பொறுப்பது.
மேலும், சிலர் வெளிநாட்டுப் பசுக்களை வளர்க்கின்றனர். வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் செய்தால் சிக்கல் வருவதுபோல் வெளிநாட்டுப் பசுக்களாலும் சிக்கல்வரும்" எனப் பேசியுள்ளார்.

திலீப் கோஷ் சர்ச்சைக் கருத்துகளுக்கு பெயர் போனவரே. இதற்கு முன்னதாக அவர், மேற்குவங்க காவல்துறைக்கு எதிராக பல்வேறு சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x