Published : 04 Nov 2019 03:59 PM
Last Updated : 04 Nov 2019 03:59 PM
புதுடெல்லி
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் தற்போது சீனாவில் இருந்து வாங்குவோம் (பை ஃபிரம் சைனா) என்று மாறிவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளார்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஆசியான் மாநாடு நடந்து வருகிறது. அதில் பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையொப்பமிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஏற்கெனவே விமர்சித்திருந்தார்.
இந்த ஒப்பந்தத்தால் வெளிநாடுகளில் இருந்து தடையில்லாமல் பொருட்கள் இந்தியாவுக்குள் இறக்குமதியாகும். இதனால் உள்நாட்டில் சிறு குறு நிறுவனங்களில் வேலையிழப்பும், சிறு வணிகர்களின் பொருளாதாரமும் நசியும் என்று சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.
இதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் மத்திய அரசை விமர்சித்துள்ளார். அதில், "மேக் இன் இந்தியா திட்டம் தற்போது சீனாவில் இருந்து வாங்குவோம் திட்டமாக மாறிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்தியரும் சீனாவில் இருந்து ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்கிறார்கள். கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து சீனாவின் இறக்குமதி 100 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்குள் மலிவான பொருட்கள் இறக்குமதியாகும். இதன் மூலம் ஏராளமான வேலையிழப்பும், பொருளாதாரச் சுணக்கமும் ஏற்படும்" என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT