Published : 02 Nov 2019 06:27 PM
Last Updated : 02 Nov 2019 06:27 PM

சந்திரனில் பாதுகாப்பாக லேண்டரை இறக்க மீண்டும் முயற்சி செய்வோம்: ஐஎஸ்ஆர்ஓ தலைவர் சிவன் 

புதுடெல்லி, பிடிஐ

சந்திரயான் - 2 திட்டம் 95-98% வரை வெற்றி பெற்றது என்றாலும் கடைசி நேரத்தில் விக்ரம் லேண்டர் பாதுகாப்பாக சந்திரனில் இறங்குவதில் தோல்வி ஏற்பட்டது. இந்நிலையில் சந்திரனில் பாதுகாப்பாக் லேண்டரை இறக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

டெல்லி ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட ஐஎஸ்ஆர்ஓ தலைவர் கே.சிவன் “சந்திரயான் 2 திட்டம் சாஃப்ட் லேண்டிங்கை சாதிக்க முடியவில்லை. ஆனால் இந்தத் திட்டத்தின் மற்ற அளவுகோல்கள் எல்லாம் 300 மீட்டர்கள் தொலைவு இருக்கும் போது வரை வெற்றியடைந்து விட்டன. எனவே இன்னொரு முறை சாஃப்ட் லேண்டிங் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தி இந்து (ஆங்கிலம்) எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த சிவன், “நிச்சயமாக இதன் தொழில்நுட்பத்தை நாங்கள் நிரூபித்துக் காட்ட வேண்டியுள்ளது. இதற்கான செயல்திட்டம் குறித்து பணியாற்றி வருகிறோம்” என்றார்.

மேலும் பிடிஐ செய்திகள் கூறுவதாவது:

“சந்திரயான் 2 திட்டம் முடிந்த கதையல்ல. ஆதித்யா எல்1 சோலார் மிஷன், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம், ஆகியவை சரியான தடத்தில் சென்று கொண்டிருக்கிறது. பெரிய எண்ணிக்கையில் அதி தொழில்நுட்ப செயற்கைக் கோள் ஏவுதல் திட்டங்களும் வரும் மாதங்களில் கைகூடும். டிசம்பர் அல்லது ஜனவரியில் எஸ்.எஸ்.எல்.வி. தன் முதல் பயணத்தை தொடங்கலாம். 200 டன் செமி-கிரையோ இன்ஜின் சோதனை முயற்சிகள் விரைவில் தொடங்கவுள்ளது. மொபைல் போன்களுக்கான நேவிக் சிக்னல்கள் வழங்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது. இது சமூகத் தேவைகளுக்கான அப்ளிகேஷன்களை உருவாக்கும் பாதையைத் திறக்கும்” என்றார் சிவன்.

மேலும் சிவன் கூறும்போது, “ஒரே வாழ்க்கைதான் உள்ளது ஆனால் பல தொழில் தெரிவுகள் உள்ளன. உங்கள் வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ள உங்களது இயல்பான திறமை, உங்களுக்கு பிடித்தது எது ஆகியவற்றை அடையாளம் காணுங்கள். பணத்துக்காக ஒரு வேலையைத் தேர்வு செய்யாமல் உங்கள் மகிழ்ச்சிக்கான வேலையைத் தேர்வு செய்யுங்கள்.

நீங்கள் செய்வதைத் திறம்படச் செய்யுங்கள். வெற்றி பெறுவதற்கு அதன் மீதான பற்றுதல் ஒன்று மட்டுமே காரணமாக இருக்க முடியாது. உங்களுக்கு திறமைகளும் பலங்களும் வேண்டும். உங்களுக்கு இசையோ, கிரிக்கெட்டோ மிகவும் பிடித்ததாக இருக்கலாம். ஆனால் தீவிர போட்டி நிலவும் இசை, அல்லது விளையாட்டுத் துறைகளில் வெற்றி பெறுவதற்கான திறமைகள் உங்களிடம் உள்ளதா? என்பதை கண்டறியுங்கள்.

உங்கள் தொழில்-வாழ்வில் நீங்கள் வெற்றி பெற அதிபுத்திசாலியாகவோ, ஜீனியஸாகவோ இருக்க வேண்டியத் தேவையில்லை. முதலிடம் பிடிப்பவராகவோ முதல்நிலையில் தேறுபவர்களாகவோ இருக்க வேண்டிய தேவையும் இல்லை. நீங்கள் தவிர்க்க வேண்டியதெல்லாம் கவனச் சிதறலையும், நேர விரய காரியங்களையும்தான்.

பிறகு இன்னொன்று, இன்னொருவரைப் பார்த்து காப்பி அடிக்காதீர்கள், ஸ்டாண்ட்-அப் காமெடியனாக இருப்பது தற்போதைய மோஸ்தர் என்பதற்காக உடனே ஸ்டேண்ட் அப் காமெடியனாக வேண்டும் என்று நினைக்காதீர்கள். அதாவது நீங்கள் நேசிக்கும் ஒன்றிற்கும் உங்களுக்கு எது நன்றாக வரும் என்பதற்கும் இடையே சரிசம நிலையைக் கண்டுபிடித்துக் கொள்வதுதான் சரியான வழி. நீங்கள் ஒரே சமயத்தில் இசை ஆர்வலராகவும் திறமையான இன்ஜினியரகாவும் இருக்க முடியும்” இவ்வாறு பட்டதாரிகளுக்கு உத்வேகமூட்டும் உரை நிகழ்த்தினார் சிவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x