Last Updated : 02 Nov, 2019 01:07 PM

 

Published : 02 Nov 2019 01:07 PM
Last Updated : 02 Nov 2019 01:07 PM

அயோத்தி தீர்ப்பு; முன்எச்சரிக்கை நடவடிக்கை: உ.பி.யின் ஆன்மீக நகரங்களில் உளவுத்துறை கண்காணிப்பு

புதுடெல்லி

அயோத்தியின் ராமர் கோயில்-பாபர் மசூதி மீதான தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதன் முன்எச்சரிக்கை நடவடிக்கைக்காக உ.பி.யின் தெய்வீக நகரங்களில் மத்திய உளவுத்துறையின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உ.பி.யின் அயோத்தியில் பல வருடங்களாக நடைபெற்று வந்த நிலப்பிரச்சனையின் மீதான மேல்முறையீட்டு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வெளியாக உள்ளது. இது எந்த தரப்பிற்கு சாதகமாக இருந்தாலும், தீர்ப்பிற்கு பின் வன்முறை, கலவரம் நிகழாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் கவனமாக உள்ளன.

இதற்காக முன்கூட்டியே உ.பி.யின் பல பதட்டமான மாவட்டங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் குவியத் துவங்கி உள்ளன. உ.பி.யின் தெய்வீக நகரங்களான அயோத்தி, காசி, வாரணாசி, அலகாபாத் மற்றும் மதுராவில் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் கடந்த மூன்று தினங்களாக முகாமிட்டுள்ளனர்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ இணையத்திடம் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, ‘முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரைவில் உபி மாநில அரசுடன் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர்.

இவ்விரு அமைப்புகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் உபி முழுவதிலும் தீவிரப்படுத்தப்படும். மற்ற மாநிலங்களின் சில பதட்டமான மாவட்டங்களிலும் இதேபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.’ எனத் தெரிவித்தனர்.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மதநல்லிணக்க அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளின் கூட்டமும் நடத்தப்பட உள்ளது. இந்த அமைப்புகளின் மூலமாக பொதுமக்கள் மத்தியில் ராமர் கோயில் தீர்ப்பு மீதான விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்தப்பட உள்ளன.

இந்தவரிசையில், தீர்ப்பிற்கு பின் தலைவர்களின் ஆதரவை பெற அனைத்து கட்சி கூட்டத்தையும் நடத்தலாமா எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x