Published : 01 Nov 2019 12:32 PM
Last Updated : 01 Nov 2019 12:32 PM

இஸ்ரேலிய நிறுவனத்துடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டிருந்தால் அது மிகப்பெரிய உரிமை மீறல்: பிரியங்கா காந்தி சாடல்

புதுடெல்லி

இஸ்ரேலிய நிறுவனத்துடன் மத்திய அரசோ அல்லது பாஜகவோ இணைந்து பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகளின் வாட்ஸ்அப் தகவல்களை உளவு பார்த்திருந்தால் அது மிகப்பெரிய ஊழல், உரிமை மீறல் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

நாடு முழுவதும் முக்கிய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இஸ்ரேலைச் சேர்ந்த உளவு சாப்ட்வேர் பீகாசஸ் மூலம் இந்த பெயர் வெளியிடப்படாத நிறுவனங்கள் சில இந்தியாவைச் சேர்ந்த முக்கிய பத்திரிகையாளர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் வாட்ஸ் அப் தகவல்களை உளவு பார்த்ததாக தகவல் வெளியானது.

கலிபோர்னியா பெடரல் நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் உளவு நிறுவனமான என்எஸ்ஓ 1,400 பேரின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு அவர்களது வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும், தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் இன்று கருத்துப் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், " இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசோ அல்லது பாஜகவோ பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகளின் தொலைபேசி, வாட்ஸ்அப் ஆகியவற்றின் தகவல்களை உளவுபார்த்திருந்தால் அது ஒட்டுமொத்த உரிமை மீறல், மனித உரிமை மீறல்.

இந்த ஊழல் தேசிய பாதுகாப்புக்கு விரும்பத்தகாத பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். மத்திய அரசு என்ன சொல்ல வருகிறது என்பதற்காகக் காத்திருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரம் நேற்று வெளியானவுடன் காங்கிரஸ் கட்சி, மத்திய அரசைக் கடுமையாகச் சாடியது. பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளை உளவுபார்த்த மத்திய அரசு சிக்கிக்கொண்டது. இதை உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.

அதேசமயம், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பதில் அளிக்கையில், " கோடிக்கணக்கான இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும். அற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது" என உறுதியளித்தார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x