Published : 27 Oct 2019 04:53 PM
Last Updated : 27 Oct 2019 04:53 PM
ஹரியாணா மாநில முதல்வராக மனோகர் லால் கட்டார், துணை முதல்வராக ஜனநாயக ஜனதாக் கட்சியின் துஷ்யந்த் சவுதாலா பதவியேற்றனர்.
ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா இவர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். சிறையிலிருந்து பரோலில் வந்திருக்கும் துஷ்யந்த் சவுதாலாவின் தந்தை அஜய் சவுதாலா பதவிவகிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஹரியாணாவில் கடந்த 21 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 90 இடங்களில் ஆளும் பாஜக 40 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 31 இடங்களில் வென்றது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு தொங்கு சட்டசபை ஏற்பட்டது.
இதனால், சுயேட்சைகள் 7 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி திடீரென்று, பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிக்க முன்வந்தது. இதனையடுத்து ஆளுநர் பாஜக கூட்டணிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.
2014-ம் ஆண்டு நடைபெற்ற ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக கர்னால் தொகுதியில் போட்டியிட்டு 63 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மனோகர்லால் கட்டார் வெற்றி பெற்றார்.
அம்மாநிலத்தில் அமைந்த முதல் பாஜக அரசின் முதல்வராக 26-10-2014 அன்று பொறுப்பேற்ற மனோகர்லால் கட்டார் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் இன்று அரியானா மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT