Published : 19 Oct 2019 10:57 AM
Last Updated : 19 Oct 2019 10:57 AM

மகாராஷ்டிரா, ஹரியாணாவில் மீண்டும் பாஜக ஆட்சி; எவ்வளவு இடங்கள் பெறும்? - தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடெல்லி

மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

288 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 9-ம் தேதியுடனும், 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 2-ம் தேதியுடனும் முடிகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இருந்து வருகிறார். நீண்டகாலத்துக்குப் பின் தேவேந்திர பட்நாவிஸ் 5ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

கடந்த தேர்தலில் சிவசேனா 63 இடங்களையும், பாஜக 122 இடங்களையும் வென்றன. மற்ற கட்சிகளின் ஆதரவுடனும், சிவசேனா வெளியில் இருந்து அளித்த ஆதரவால் பாஜக ஆட்சி அமைத்து 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

ஹரியாணா மாநிலத்தில் முதல்வராக பாஜகவைச் சேர்ந்த மனோகர் லால் கட்டார் இருந்து வருகிறார். இவரும் 5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநில சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் மாதம் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதுபோலவே தமிழகம் உட்பட பிறமாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில் இருமாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. ஐஏஎன்எஸ் மற்றும் சிவோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் மகாராஷ்டிராவில் பாஜக -சிவசேனா கூட்டணி மொத்தமுள்ள 288 இடங்களில் 182 முதல் 206 இடங்களை பெறும் எனவும், காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் அணி 72 முதல் 98 இடங்கள் வரை பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

90 இடங்களை கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக 79 முதல் 87 இடங்கள் வரை பெறலாம் என ஐஏஎன்எஸ் - சிவோட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிபி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் மகாராஷ்டிராவில் பாஜக -சிவசேனா கூட்டணி 194 இடங்களையும், காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் அணி 86 இடங்களையும், மற்றவர்கள் 8 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என தெரிய வந்துள்ளது.

ஹரியாணாவில் நடந்த தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 83 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்து கணிப்பில் மகாராஷ்டிராவில் பாஜக மட்டும் 142 – 147 இடங்களில் வெல்லும் எனவும், அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா 83 -85 இடங்களில் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 84 – 52 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. ஹரியாணாவில் பாஜக 58 முதல் 70 இடங்களில் வெற்றி பெறும் எனவும் காங்கிரஸ் 12 -15 இடங்களிலும் ஜனநாய ஜனதா கட்சி 5 முதல் 8 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x