Published : 19 Oct 2019 08:20 AM
Last Updated : 19 Oct 2019 08:20 AM

அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் எந்த சமரச திட்டத்தையும் ஏற்கவில்லை: முஸ்லிம் அமைப்புகள் விளக்கம்

புதுடெல்லி

அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் எந்த சமரச திட்டத்தையும் ஏற்கவில்லை என்று முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையி லான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் நாள் தோறும் விசாரணை நடத்தியது. நாற்பது நாட்கள் தொடர்ந்து நடந்த விசாரணையில் இருதரப்பு வாதங் கள் கடந்த 16-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் நவம்பர் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக நவம்பர் 4 முதல் 17-ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தியில் 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டிருக்கிறது.

இதனிடையே உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்த 3 பேர் அடங்கிய சமரச குழு கடந்த 16-ம் தேதி சீலிடப்பட்ட உறையில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் நேற்று முன்தினம் வெளி யாகின. அதன்படி சர்ச்சைக்குரிய நிலத்தை மத்திய அரசே கையகப் படுத்திக் கொள்ள சன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் சம்மதித்துள்ளதாகக் கூறப்பட்டது.

அதற்குப் பதிலாக உத்தர பிரதேசத்தில் பாழடைந்த நிலையில் உள்ள 52 மசூதிகளை உத்தர பிரதேச அரசு மீண்டும் கட்டித் தர வேண்டும். தொல்பொருள் ஆய்வுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மசூதிகளில் தொழுகைக்கு அனுமதி அளிக்க வேண்டும். அயோத்தி பாபர் மசூ திக்குப் பதிலாக புதிய இடத்தில் மசூதி கட்டித் தர வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

இந்த சமரச திட்டத்துக்கு பெரும்பாலான இந்து அமைப்பு களும் ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அயோத்தி வழக்கின் முஸ்லிம் அமைப்புகளின் வழக்கறிஞர்கள் இஜாஸ் மக்பூல், எஸ்.ஏ.சயீது, எம்.ஆர். ஷாம்சாத், இர்ஷாத் அகமது, புஜைல் அகமது அயூபி ஆகியோர் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

சமரச குழு அல்லது நிர்மோகி அகாடா அல்லது வழக்கில் தொடர் புடைய ஏதோ ஓர் அமைப்பு சில தகவல்களை கசிய விட்டுள்ளது. சமரச குழு தொடர்பாக எந்தவொரு தகவலையும் வெளியிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதை மீறி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அயோத்தி விவகாரத்தில் எந்தவொரு சமரச திட்டத்தையும் முஸ்லிம் அமைப்புகள் ஏற்க வில்லை. சன்னி வக்பு வாரியம் அல்லது 3 பேர் சமரச குழுவின் யோசனைகளை நாங்கள் ஒரு போதும் ஏற்கமாட்டோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x