Published : 18 Oct 2019 11:27 AM
Last Updated : 18 Oct 2019 11:27 AM
புதுடெல்லி
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக தற்போது ரஞ்சன் கோகய் இருந்து வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி நியமிக்கப்பட்ட ரஞ்சன் கோகயின் பதவிக்காலம் வரும் நவம்பர் 17-ம் தேதி முடிகிறது. வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் இருந்து நியமிக்கப்பட்ட முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வரும் நவம்பர் 17-ம் தேதியுடன் ஓய்வு பெற இருப்பதால், தனக்குப் பின் யாரை தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் எனப் பரிந்துரை செய்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி சரத் அரவிந்த் போப்டே : படம் உதவி ட்விட்டர்
அதில் தனக்குப் பின் தலைமை நீதிபதியாக வருவதற்கு மூத்த நீதிபதி சரத் அரவிந்த் போப்டே பெயரை, ரஞ்சன் கோகய் பரிந்துரை செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ரஞ்சன் கோகய்க்கு அடுத்த இடத்தில் அதாவது 2-வது இடத்தில் போப்டே இருந்து வருகிறார். இவர் மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். போப்டேவின் பதவிக்காலம் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி வரை இருக்கிறது
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் கடந்த 1956-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பிறந்தவரான போப்டே நாக்பூர் பல்கலைக்கழகத்தில் படித்தவர். 2000-ம் ஆண்டில் மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பணியில் சேர்ந்து, அதன்பின் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உயர்ந்தார். அதன்பின் 2013-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக போப்டே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT