Published : 15 Oct 2019 03:05 PM
Last Updated : 15 Oct 2019 03:05 PM
புதுடெல்லி
அயோத்தி வழக்கில் இந்து தரப்பு சார்பில் இன்று இறுதி வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில் வரலாற்று தவறை சரி செய்யுங்கள் என வலியுறுத்தப்பட்டது.
அயோத்தி ராம ஜென்மபூமி பாபர் மசூதி நிலத் தகராறு வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக மத்தியஸ்தர் குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்தது. ஆனால் சமரச முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடர்ந்து விசாரித்து வருகிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல்சாசன குழு வழக்கை விசாரிக்கிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ம் தேதி ஓய்வு பெறுவதால் அதற்கு முன் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் விசாரணைக்கு இடையே மத்தியஸ்தர் குழு மூலம் மனு தாரர்கள் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள விரும்பினால் அதற்கு தடையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் இன்று ராம் லல்லா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பராசரன் வாதிடுகையில் கூறியதாவது:
‘‘வெளிநாட்டில் இருந்து வந்த மன்னர் நான் தான் பாபர், நான் சொல்வது தான் சட்டம் என்று சொல்லிக் கொண்டிருக்க மாட்டார். இந்தியாவில் வலிமையான மன்னர்கள் பலர் இருந்தபோதிலும் கூட அவர்கள் நாட்டிற்கு வெளியே சென்று எந்த இடத்தையும் கைபற்றியது இல்லை.
இஸ்லாமியர்களை பொறுத்தவரை அனைத்து மசூதியும் ஒன்று தான். தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று என தனியாக இல்லை. அதேசமயம் இந்த இடத்தை பொறுத்தவரையில் இது ராமர் பிறந்த இடம் என்பதால் புனிதமான இடமாக பார்க்கிறார்கள்.
அங்குள்ள கோயிலை சிறப்பாக கருதுகின்றனர். இதனை மாற்ற முடியாது. இதனால் தான் ராமஜென்ம பூமிக்காக நூற்றாண்டுகளாக அவர்கள் போராடுகிறார்கள்.’’
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT