Published : 30 Sep 2019 08:32 PM
Last Updated : 30 Sep 2019 08:32 PM

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல்: சிவசேனா – பாஜக தொகுதி பங்கீடு; சிக்கல் தீர்ந்தது

மும்பை
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனாவுடனான தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் இரு கட்சிகளும் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன.


இதுபோலவே நீண்டகாலமாக கூட்டணியில் உள்ள பாஜகவும், சிவசேனாவும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இருகட்சிகளும் 135 தொகுதிகளில் போட்டியிடவும், மீதமுள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கவும் தொடக்கத்தில் முடிவு செய்தன.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு அதிகமான இடம் வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியதால் கூட்டணி முறிந்து இருகட்சிகளும் தனித்து போட்டியிட்டன. 122 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக 63 இடங்களில் வென்ற சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.

எனினும் கடந்த மக்களவைத் தேர்தலில் இருகட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. கடந்த மக்களவைத் தேர்தலில் சிவசேனாவை விட பாஜக கூடுதல் தொகுதிகளில் வென்றதால் தங்களுக்கு கூடுதல் தொகுதி வேண்டும் என மகாராஷ்டிர மாநில பாஜக நிர்வாகிகள் கோரி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதகிகளில் பாஜக 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனால் பாஜக 23 தொகுதிகளிலும், சிவசேனா 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பாஜக கூடுதலாக வாக்குகளையும் பெற்றிருந்தது. எனவே சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதலாக இடங்கள் வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனாவுக்கு 120 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க பாஜக முடிவு செய்தது. இதனை ஏற்க சிவசேனா மறுத்தது. இதனால் இருகட்சிகள் இடையே கூட்டணியில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்தநிலையில் மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க டெல்லியில் பாஜக தேர்தல் கமிட்டி கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

நள்ளிரவு வரை நீடித்த இந்த கூட்டத்தில் மகாராஷ்டிர சட்டப்பேரவை தொகுதி பங்கீடு தொடர்பாக நீண்ட விவாதம் நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் அம்மாநில பாஜக மூத்த தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து சிவசேனாவுக்கு 124 தொகுதிகள் மட்டுமே வழங்க முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனாவுடனான தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் தெரிவித்துள்ளார்.
தொகுதிகள் பங்கீடு எண்ணிக்கை குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேயும், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸூம் கூட்டாக அறிவிப்பார்கள் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x