Published : 29 Sep 2019 10:54 AM
Last Updated : 29 Sep 2019 10:54 AM
புதுடெல்லி
தமிழ்மக்கள் ஒன்றுபட்டு,ஒரு மொழியில் பேசினால், தமிழ்மொழியின், கலாச்சாரத்தின் பெருமையை உணர்வார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு 7 நாட்கள் பயணமாகச் சென்றிருந்த பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் அமெரி்க்க வாழ் இந்தியர்கள் நடத்திய ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், " சுதந்திரமான, ஜனநாயக சமுதாயத்துக்கு பல்வேறுவிதமான மொழிகள் இருப்பது முக்கியமான அடையாளம்" எனத் தெரிவித்தார்
ஆனால், பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா சமீபத்தில் இந்தி தினம் நிகழ்ச்சியில் பேசும்போது, இந்தி மொழி குறித்தும் ஒருமொழி ஒருதேசம் கருத்தை வலியுறுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் விமர்சனம் எழுந்ததையடுத்து தன்னுடைய கருத்து திரிக்கப்பட்டதாகவும், இந்தியை 2-வதுமொழியாக ஆக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவ்வப்போது முக்கிய நிகழ்வுகள் குறித்து சிதம்பரம ்சார்பில் அவரின் குடும்பத்தினர் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, ப.சிதம்பரம் சார்பில் அவரின் குடும்பத்தினர் இன்று ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளனர். அதில் " என் சார்பில் எனது குடும்பத்தினரை இந்த கருத்தை பதிவிடக் கூறினேன். தமிழ் மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால், தமிழ்மொழியின் மேன்மையையும், தமிழ் கலாச்சாரத்தையும் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
ஐநா.ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கும் போது, கனியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று வாசகத்தை கூறி தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT