Last Updated : 22 Jul, 2015 10:08 AM

 

Published : 22 Jul 2015 10:08 AM
Last Updated : 22 Jul 2015 10:08 AM

ராஜீவ் கொலை வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பில் குரல் கொடுக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு: தமிழக அரசின் வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ராஜீவ் கொலை வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பில் குரல் கொடுக்கும் தார்மீக உரிமை மத்திய அரசுக்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் தொடர் புடைய நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவித்து தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பினாகி சந்திர கோஸ், அபய் மனோகர் சாப்ரே, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி ஆஜரானார். ‘மாநில அரசு தன்னிடம் உள்ள தண்டனைக் குறைப்பு அதிகாரத்தின்படி, குற்றவாளிகளை விடுதலை செய்தது. இதில் தலையிட மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை’ என்று அவர் வாதிட்டார்.

குற்றவாளிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, ‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வர்கள் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். தமிழக அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது’ என்று வாதிட்டார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார், ‘ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது 18 பேர் உயிரிழந்துள்ளனர். 48 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சார்பில் குரல் கொடுக்கும் தார்மீக உரிமை மத்திய அரசுக்கு உண்டு’ என்று வாதிட்டார். வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், ‘உச்ச நீதிமன்ற தீர்ப்பை பயன்படுத்தி, கொலை குற்றவாளி களை விடுவிக்க சட்டத்தை வளைக்க முயற்சிக்கும்போது, பாதிக்கப்பட் டோர் சார்பில் குரல் கொடுக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு’ என்று தெரிவித்தனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x