Published : 27 Sep 2019 06:05 PM
Last Updated : 27 Sep 2019 06:05 PM
புதுடெல்லி,
பூடானில் பறந்துகொண்டிருந்த இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இந்திய விமானி உள்பட இரு விமானிகள் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் இந்திய ராணுவத்தின் ஒற்றை இன்ஜின் கொண்ட சீட்டா ஹெலிகாப்டர் ஆகும். இந்த ஹெலிகாப்டர் பணி நிமித்தமாக இன்று காலை அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கிர்முவிலிருந்து பூடானின் யோங்ஃபுல்லா வரை வானில் பறந்துகொண்டிருந்தது.
அதில் லெப்டினன்ட்-கர்னல் தகுதியில் இருந்த இந்திய ராணுவ விமானி ஒருவரும் இருந்தார். ராயல் பூடான் ராணுவத்தைச் சேர்ந்த விமானி ஒருவர் இந்திய ராணுவத்துடன் சேர்ந்து பயிற்சி மேற்கொண்டபோது இந்த விபத்து நடந்துள்ளது.
கிழக்கு பூடானில் நடந்த இந்த விபத்தில் இருநாட்டு விமானிகள் இருவரும் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் கூறுகையில், "பூடானின் யோங்புல்லா அருகே பிற்பகல் 1 மணியளவில் தரையிறங்கியபோது இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. தரையிறங்குவதற்குப் பதிலாக தவறுலான திசையில் நகர்ந்து கெங்டோங்மானி மலையில் மோதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணுவக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள எங்கள் வானொலி மற்றும் காட்சிக் கருவியும் மதியம் 1 மணிக்குப் பின்னர் ஹெலிகாப்டரின் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டன.
பூடான் மலைப்பகுதியான யோங்ஃபுல்லாவிலிருந்து தரைவழியாகவே தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடமும் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT