Last Updated : 26 Sep, 2019 04:48 PM

 

Published : 26 Sep 2019 04:48 PM
Last Updated : 26 Sep 2019 04:48 PM

அலட்சியம் காரணமாக பெண் நோயாளி மரணம்: அசாம் மருத்துவருக்கு ரூ.5 லட்சம் அபராதம்

பிரதிநிதித்துவப் படம்

கவுகாத்தி

அரசு மருத்துவரின் அலட்சியம் காரணமாக பெண் நோயாளி ஒருவர் மரணமடைந்ததை அடுத்து அசாம் மனித உரிமைகள் ஆணையம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது. இரண்டு மாதங்களுக்குள் நோயாளியின் கணவருக்கு இந்தத் தொகையைச் செலுத்துமாறு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

கடந்த 2017-ல் நடந்துள்ள இந்த மருத்துவ அலட்சிய சம்பவத்திற்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.

இதுகுறித்து அசாம் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''கடந்த 2017ஆம் ஆண்டு பிங்கி தாஸ் என்ற பெண் நோயாளி அம்பாரி நகர்ப்புற சுகாதார மையத்திற்கு சிகிச்சை பெற வந்தார். நோயாளிக்கு முதுகுவலி, லேசான காய்ச்சல், வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் அறிகுறிகள் இருந்ததை அடுத்து டாக்டர் தாக்குரியாவிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

பரிசோதனையின் போது, அப்பெண்மணிக்கு ரத்த அழுத்தம் சாதாரணமாக இருந்தது. நாடித் துடிப்பும் சாதாரணமாக இருந்தது. ஆனால் அப்பெண்ணின் அடிவயிற்றில் அவரது சிறுநீரக பிராந்தியத்தின் இருபுறமும் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் ஊசி போடவும் ட்ரிப்ஸ் ஏற்றவும் பரிந்துரைத்துள்ளார். அவ்வாறே நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகுதான் நோயாளிக்கு சிக்கல்கள் அதிகரித்தன. அதனால் மேலும் அவரை அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு இந்த மருத்துவர் பரிந்துரைந்தார். மேற்கொண்டு எந்தவொரு சிகிச்சையும் பெறுவதற்கு முன்பு அவர் இறந்துவிட்டார்,

இதனை அடுத்து நோயாளியின் கணவர் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபரில் இது தொடர்பான வழக்கை அசாம் மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்தார்.

இதுகுறித்து ஆணையக்குழு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மாநில இயக்குநரிடம் விசாரணை அறிக்கையை கோரியது. ஆனால் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மாநில இயக்குநரின் விசாரணை அறிக்கையில் டாக்டர் தாக்குரியா எந்தவொரு மருத்துவ அலட்சியமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

முதுகுவலி என்று வந்த ஒரு நோயாளியைப் பரிசோதிக்கும் மருத்துவர் முதுகுவலி மட்டுமே இருப்பதை ஒப்புக்கொண்டபிறகு அவர் பரிந்துரைக்கப்படும் மருந்தினால் எப்படி நோயாளி இறக்க முடியும் என்று ஆணையக்குழுவுக்கு குழப்பம் ஏற்பட்ட நிலையில் கவுகாத்தி மருத்துவக் கல்லூரியின் மருத்துவ நிபுணர் அல்லது மருந்துகளின் வல்லுநர் ஒருவரை அணுகியது. எனினும் அவர்களால் இந்தப் பிரச்சினையில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரின் அலட்சியம் எதுவும் கண்டறியப்படவில்லை.

ஆனால், நோயாளி இறந்ததற்கு குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர் உரிய மருத்துவ ரீதியான விளக்கம் அளிக்கப்படாத காரணத்தால் அவரது விளக்கம் திருப்தி அளிக்கவில்லை. எனவே, வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் டாக்டர் தாக்குரியாவின் மருத்துவ அலட்சியமே பிங்கி தாஸ் என்ற பெண்ணின் மரணத்திற்குக் காரணம் என முடிவு செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியைப் பணியில் அமர்த்தியது என்ற வகையில், மாநில அரசு அபராதத் தொகையை உடனே செலுத்த வேண்டும். அவரது சம்பளத்திலிருந்து மாதாமாதம் பிடித்தம் செய்துகொள்ளவும் எனவும் ஆணையம் உத்தரவிட்டது''.

இவ்வாறு அசாம் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x