Published : 20 Sep 2019 10:22 AM
Last Updated : 20 Sep 2019 10:22 AM

சாரதா ஊழல் வழக்கில் தலைமறைவான அதிகாரி ராஜீவ் குமாரை தேடி பல இடங்களில் சிபிஐ சோதனை

கொல்கத்தா

சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் தலைமறைவாக உள்ள மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமாரை தேடி, சிபிஐ அதிகாரிகள் நேற்று பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கை சிபிஐ விசாரித்து வரு கிறது. மேற்கு வங்க சிஐடி கூடுதல் இயக்குநரும் கொல்கத்தா மாநகர காவல் முன்னாள் ஆணையருமான ராஜீவ் குமார் இந்த வழக்கை முதலில் விசாரித்தார். அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக சில ஆவணங்களை அழிக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் குமாரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த 13-ம் தேதி வாபஸ் பெற்றது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு குமாருக்கு சிபிஐ 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில், ராஜீவ் குமாரை கண்டுபிடிக்கும் முயற்சியாக சிபிஐ அதிகாரிகள் நேற்று கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அத்துடன் வெள்ளிக்கிழமை (இன்று) காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு ராஜீவ் குமாருக்கு இறுதி கெடு விதித்துள்ளனர். மேலும் அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்திலும் சிபிஐ சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x