Published : 19 Sep 2019 12:52 PM
Last Updated : 19 Sep 2019 12:52 PM

பிரதமர் மோடியைத் தொடர்ந்து அமித் ஷாவைச் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி

புதுடெல்லி

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித் ஷாவை இன்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன

டெல்லிக்கு 3 நாட்கள் பயணமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வந்துள்ளார். பிரதமர் மோடியை நேற்று அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், " இரு அரசுகளுக்கு இடையிலான சந்திப்பு இது. மேற்கு வங்கத்தின் வளர்ச்சி நிதி கோரியும், பெயர் மாற்றம் கோரியும் பிரதமர் மோடியைச் சந்தித்தேன். சந்திப்பு சிறப்பாக இருந்தது" என்று தெரிவித்தார்

இதற்கிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரம் கேட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அமித் ஷாவை இன்று நண்பகல் 1.30 மணிக்குப்பின் மம்தா பானர்ஜி சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மம்தாவிடம் நிருபர்கள் கேட்டபோது, "இது வழக்கமான சந்திப்புதான். பிரதமரைச் சந்தித்த பின், உள்துறை அமைச்சர், நிதியமைச்சரை மாநில முதல்வர் சந்திப்பதில் புதிதாக ஒன்றும் இல்லை. நிதியமைச்சரைச் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை என்பதால் உள்துறை அமைச்சரை மட்டும் சந்திக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் நிருபர்ளிடம் நேற்று கூறுகையில், "பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி சந்தித்தது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், இது தாமதமான சந்திப்பு என்று நினைக்கிறேன். தன்னையும், தனது கட்சியையும் சிபிஐயிடம் இருந்து காக்கவே எடுக்கும் முயற்சி. ஆனால், எந்தப் பலனும் இருக்கப்போவதில்லை" எனத் தெரிவித்தார்.

சாரதா சிட்பண்ட் வழக்கில் தொடர்புடையவருமான முன்னாள் கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜாராமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.

அவரைக் கண்டுபிடிக்க சிபிஐ சிறப்புப் பிரிவை உருவாக்கி தேடி வருகிறது. இந்தச் சிக்கலில் இருந்து ராஜீவ் குமாரை மீட்பது குறித்து அமித் ஷாவுடன் மம்தா பானர்ஜி பேசலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x