Published : 18 Sep 2019 03:21 PM
Last Updated : 18 Sep 2019 03:21 PM

ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக தீவிரவாதிகளை அனுப்பும் பாகிஸ்தான்; பதிலடி கொடுக்கும் இந்திய ராணுவம்: வீடியோ வெளியானது

ஸ்ரீநகர்

தனது ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதி வாயிலாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்ப அதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்துக்குப் பின்னர் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்துவருகிறது.

இந்நிலையில் தனது ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் வாயிலாக இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் உதவுவது தற்போது அம்பலமாகியுள்ளது.

செப்டம்பர் 12, 13 இடைப்பட்ட இரவு நேரத்தில் பதிவான அந்த வீடியோவில், பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவல் முயற்சி நடப்பது பதிவாகியிருக்கிறது. அதற்கு இந்தியத் தரப்பிலிருந்து கையெறி குண்டுகளை வீசி பதில் தாக்குதல் நடத்துவதும் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக ராணுவ தரப்பில், "370 ரத்துக்குப் பின்னர் பாகிஸ்தான் எதிர்பாராத இடங்களில்கூட தாக்குதல் தளங்களை அமைத்து வருகிறது. இவையனைத்தும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெறும் 2 கி.மீ தூரத்திலேயே இருக்கின்றன.

க்ரூயேஸ், மச்சால், கேரன், தாங்தார், ஊரி, பூஞ்ச், நவ்ஷேரா, சுந்தர்பாணி, ஆர்.எஸ்.புரா, ராம்கர், கதுவா பகுதிகளை ஒட்டி இந்த தாக்குதல் மற்றும் ஊடுருவல் தளங்களை பாகிஸ்தான் அமைத்துள்ளது. சுமார் 250 தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

மேலும் காளிகட்டி பகுதியில் கடந்த ஆகஸ்ட் முதல் தொலைதொடர்பு மையத்தை பாகிஸ்தான் ஒருங்கிணைத்து வருகிறது. பாகிஸ்தானின் பஞ்சாபில் தீவிரவாத செயல்களுக்கு ஆள் சேர்ப்பு தொடங்கியுள்ளது. தவுரா இ ஆம், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புகள் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளன. முசாபர்பாத், மன்சேரா, கோட்லி முகாம்களில் பயிற்சிகள் நடைபெறுகின்றன.

ஆனால், பாகிஸ்தானின் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தகுந்த பதிலடி கொடுத்துவருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் இன்றுவரை பல்வேறு கெடுபிடிகள் நிலவுவதாகவும், ஊரடங்கு உத்தரவுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. சர்வதேச நாடுகளின் உதவிகளைப் பெற முயற்சித்து வருகிறது. ஆனால், காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பிவிட்டது, தடைகளை முழுமையாக நீக்குவதும் படைகளைக் குறைப்பதும் பாகிஸ்தான் நடந்துகொள்வதில்தான் இருக்கிறது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியிருந்தார்.

காஷ்மீர் அமைதியைக் குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகளைத் தூண்டி விடுவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அவரின் கூற்றை நிரூபிப்பதுபோல் பாகிஸ்தானின் ஊடுருவல் முயற்சி அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x