Published : 11 Sep 2019 01:38 PM
Last Updated : 11 Sep 2019 01:38 PM

ஐஎன்எக்ஸ் மீடியா  வழக்கு: ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத்தாக்கல்

புதுடெல்லி
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கவும், சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த சிறையில் அடைக்கும் உத்தரவை ரத்து செய்யவும் கோரி அவரது சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகர் முன் நடந்து வருகிறது.

ஏறக்குறைய 15 நாட்களாக சிபிஐ காவலில் ப.சிதம்பரம் இருந்து வந்தார். செப்டம்பர் 5-ம் தேதி அவர் மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என சிதம்பரம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். பொருளாதார குற்றவாளிகள் வைக்கப்பட்டிருக்கும் 7-ம் எண் கொண்ட சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 5-ம் தேதி நடந்த விசாரணையின்போது, அமலாக்கத்துறையிடம் சரண் அடைய தயாராக உள்ளதாக சிதம்பரம் தரப்பில், மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு குறித்து செப்டம்பர் 12-ம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கவும், சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும் கோரி அவரது சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x