Published : 10 Sep 2019 11:56 AM
Last Updated : 10 Sep 2019 11:56 AM
மும்பை
தேசியவாத காங்கிரஸ் எம்.பி. உதயன்ராஜே போஸ்லே பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியான நிலையில் அவருக்கு தற்போது தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மகாராஷ்டிராவில் எதிர் அணியைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் ஒவ்வொருவராக அக்கட்சிகளில் இருந்து விலகி பாஜக மற்றும் சிவசேனாவில் இணைந்து வருகின்றனர்.
அங்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் ஆளும் பாஜக- சிவசேனா கூட்டணியில் இணைபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சத்ரா தொகுதி எம்.பி. உதயன்ராஜே போஸ்லே அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. அவர் விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் பாஜகவில் சேரும் முன்பாக எம்.பி. பதவியை ராஜினாமா செய்யுமாறு பாஜக தலைமை கூறியதாக தெரிகிறது. இதனால் போஸ்லே தர்மசங்கடத்தில் இருப்பதாகவும், தேசியவாத காங்கிரஸில் தொடர்வதா அல்லது பாஜகவில் இணைவதா என்ற முடிவை எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.
அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்து மீண்டும் பாஜக சார்பில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்களில் ஒரு சிலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் போஸ்லே இன்னமும் முடிவெடுக்கவில்லை என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT