Published : 07 Sep 2019 11:19 AM
Last Updated : 07 Sep 2019 11:19 AM
பெங்களூரு,
இஸ்ரோ மையத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடியிடம் மாணவர் ஒருவர் தான் நாட்டின் குடியரசுத் தலைவராக என்ன செய்ய வேண்டும் என்று வினவினார்? அதற்கு பிரதமர் மோடி சுவாரஸ்யமாக பதிலளித்தார்.
இஸ்ரோ மையத்தில் நேற்றிரவு சந்திரயான் - 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் காட்சியினைப் பார்க்க பிரதமருடன் நாடு முழுவதுமிருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் 60 பேர் வந்திருந்தனர்.
மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாணவர் ஒருவர், எனது லட்சியம் இத்தேசத்தின் குடியரசுத் தலைவராக வேண்டுமென்பதே. அதற்கு நான் எத்தகைய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என வினவினார்.
உடனே மோடி அச்சிறுவனிடம் ஏன் குடியரசுத் தலைவராக விரும்புகிறீர்கள்? பிரதமராக விரும்பலாமே? என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மாணவர்கள் வாழ்க்கையில் உயரிய லட்சியங்களைக் கொள்ள வேண்டும். இலக்குகளை குறுகிய கால திட்டங்களாகப் பகுதி பகுதியாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். சிறிய இலக்குகளை எட்டிப்பிடிக்க முதலில் முனைப்பு காட்டுங்கள். அதில் ஏதேனும் சறுக்கல் வந்தால் அதை மறந்துவிடுங்கள். ஏமாற்றம் உங்களை ஒருபோதும் ஆட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார்.
முன்னதாக, விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க பயணித்தபோது சரியாக 2.1 கி.மீ தூரமே இருந்த நிலையில் சிக்னல் துண்டிக்கப்பட்டது.
- ஏஎன்ஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT