Published : 05 Sep 2019 12:02 PM
Last Updated : 05 Sep 2019 12:02 PM
புதுடெல்லி,
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறு போக்குவரத்துக் காவலர்கள் இரண்டு மடங்கு அபராதம் செலுத்த வேண்டும் என டெல்லி போக்குவரத்து காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர்தான், ரூ.15,000 மதிப்புள்ள ஸ்கூட்டியை ஓட்டிச் சென்ற நபர் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அவருக்கு புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி ரூ.23,000 அபராதம் விதித்து பரபரப்பை ஏற்படுத்தியது டெல்லி போக்குவரத்து காவல்துறை.
தற்போது, தனது துறை ஊழியர்கள், அதிகாரிகளும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற கெடுபிடிகளை விதித்துள்ளது.
செப்டம்பர் 3 தேதியிடப்பட்டு டெல்லி போக்குவரத்து காவல் துறையின் இணை ஆணையர் மீனா சவுத்ரியின் கையொப்பம் இடப்பட்டு வெளியான உத்தரவில், "மோட்டார் வாகனச் சட்டத்தின் 210-பி பிரிவின் படி, போக்குவரத்து விதிகளை அமலாக்கும் அதிகாரம் படைத்தவர்கள் யாரேனும் விதிகளை மீறினால் அவர்களுக்கு வழக்கமான அபராதத்தைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக அபராதம் விதிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவை அமல்படுத்தியது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இச்சட்டம் கடந்த 1-ம் தேதி (செப்.1) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் டெல்லி அரசே போக்குவரத்து விதிகளை அமல்படுத்துவதில் அதிக கெடுபிடி காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-ஏஎன்ஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT