Published : 04 Sep 2019 04:20 PM
Last Updated : 04 Sep 2019 04:20 PM
புதுடெல்லி,
பிரதமர் மோடியை தொடர்ந்து பாராட்டியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இது தொடர்பாக தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை இன்று (புதன்கிழமை) சந்தித்த அவர், "மோடிக்கு மக்கள் ஏன் வாக்களித்தார்கள் என்பதை புரிந்துகொள்வதுதான் நம் கொள்கையாக இருக்க வேண்டும் என்றே நான் கூறியிருந்தேன்.
கடந்த 2014, 2019 மக்களவைத் தேர்தலில் 19% வாக்குகளை காங்கிரஸ் கட்சி பெற்றது. ஆனால், 2014-ல் 31% வாக்குகள் பெற்ற மோடி தலைமையிலான பாஜக, 2019-ல் 37% வாக்குகளை பெற்றுள்ளது.
காங்கிரஸுக்கு வாக்களித்த மக்கள் அனைவரும் தற்போது பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். மக்கள் ஏன் சென்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால் அவர்களை எப்படி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு அழைத்துவர இயலும். நான் மோடியை புகழவில்லை.
அவருக்கு வாக்குகள் எப்படி சென்றது என்பதை அறிய வேண்டும். செய்த தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்றே சொன்னேன்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக பிரதமரைப் பாராட்டி சசி தரூர் பதிவு செய்த ட்வீட்களால் அவர் கேரள காங்கிரஸ் கட்சித் தலைவரின் அதிருப்திக்கு ஆளானார். முதலில், சரியான பாதையில் செல்லும்போதும், சரியான செயல்களை செய்யும்போதும் பிரதமர் மோடியை பாராட்ட வேண்டும் என சசி தரூர் தெரிவித்திருந்தார்
அதற்கு கண்டனங்கள் எழுந்தபோதும் அதை கண்டுகொள்ளவில்லை. பிரதமர் முன்மொழிந்த ஒரு வார்த்தை பல மொழி சவாலை ஏற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மோடி, இந்தி ஆதிக்கத்திலிருந்து விலகுவதாகப் பாராட்டியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT