Published : 02 Sep 2019 12:44 PM
Last Updated : 02 Sep 2019 12:44 PM

ஆளுநர் பதவி பாதுகாப்பு முடிந்தது: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விசாரணை எதிர்கொள்கிறார் கல்யாண் சிங்

புதுடெல்லி,

ராஜஸ்தான் ஆளுநராக இருந்த கல்யாண் சிங் பதவிக்காலம் முடிந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ விசாரணையை விரைவில் எதிர்கொள்ள இருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 1992ம் ஆண்டு அயோத்தியி்ல பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இருந்தவர் கல்யாண் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கையாண்டு வரும் சிபிஐ, பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரி, கல்யாண் சிங் ஆகியோர் கிரிமில் சதி குற்றம் சாட்டியது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனக் கோரி கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக கல்யாண் 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். இதனால் ஆளுநராக இருந்த கல்யாண் சிங்கிடம் விசாரணை நடத்த முடியவில்லை. ஆனால், கல்யாண் சிங்கின் பதவிக்காலம் முடிந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

தற்போது பாபர் மசூதி இடிப்பு வழக்கை மீண்டும் நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. இதுநாள் வரை ஆளுநர் என்ற பதவியில் இருந்ததால், அரசியல்சாசனப்படி பாதுகாப்பு பெற்று, சிபிஐ அமைப்பால் விசாரணைக்கு ஆளாகாமல் கல்யாண் சிங் தவிர்த்து வந்தார்.

ஆனால், இனிமேல் அரசியல்சாசனப் பாதுகாப்பு இருக்காது என்பதால், விரைவில் சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்படலாம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றமும் சிபிஐ அமைப்பிடம் முன்பு தெரிவிக்கையில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் கல்யாண் சிங் பதவி முடிந்ததும், அவரை விசாரணைக்கு அழைக்கலாம் என்று தெரிவித்திருந்தது.

அரசியல்சாசனப்படி, குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோர் மீது எந்த சிவில், கிரிமினல் வழக்கு இருந்தாலும் அவர்களின் பதவிக்காலம் முடியும்வரை நீதிமன்றமோ, விசாரணை அமைப்புகளோ அவர்களை விசாரணைக்கு அழைக்கக்கூடாத வகையில் அரசியலமைப்பு 361பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது. அந்த பாதுகாப்பை இதுநாள்வரை கல்யாண் சிங் பெற்றுவந்தார். அந்த அரசியல்சாசன பாதுகாப்பு நேற்றுடன் முடிந்துவிட்டது.

இனிமேல், கல்யாண் சிங்கை பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு அழைக்க தடைஏதும் இல்லை.

இதுகுறித்து சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், " அரசியல்சாசன பாதுகாப்பு அளிக்கப்பட்டவரை கல்யாண்சிங்கை விசாரணைக்கு அழைக்க முடியாது. ஆளுநர் பதவி முடிந்துவிட்டதால், அவரை விசாரணைக்கு அழைக்கலாம். ஆனால், அதற்குள் அவர் வேறு ஏதாவது அரசியல்சாசன பதவிக்கு நியமிக்கப்படாமல் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

கல்யாண் சிங்கிற்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில், " உத்தப்பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருந்த கல்யாண் சிங் ஆட்சியில்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் முன் அப்போதைய முதல்வர் கல்யாண் சிங் ஆஜராகி சர்ச்சைக்குரிய கட்டிடத்தை இடிக்க அனுமதிக்கமாட்டேன் என்று கூறினார்.

ஆனால், பாபர் மசூதி இடிக்கும்சூழல் நிலவுகிறது என்று அறிந்தபின்பும் கூட முதல்வராக இருந்த கல்யாண் சிங் மத்திய பாதுகாப்பு படையைக் கோரவில்லை. இதன் மூலம் பாபர் மசூதி இடிப்பு சதியில் கல்யாண் சிங்கிற்கும் தொடர்பு இருக்கிறது, அதற்கான முகாந்திரங்கள் அதிகமான இருக்கின்றன" எனத் தெரிவித்துள்ளது.
1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்ககப்பட்ட சம்பவத்துக்குப்பின், கல்யாண் சிங் முதல்வர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது

52 ஆண்டுகளுக்குப்பின்...

இதற்கிடையே ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக 5 ஆண்டுகளை முழுமையாக கல்யாண் சிங் நிறைவு செய்துள்ளார். கடந்த 52 ஆண்டுகள் வரலாற்றில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளுநர் பதவியை 5 ஆண்டுகள்நிறைவு செய்தவர் கல்யாண் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரத்துக்குப்பின், இதுவரை ராஜ் பரமுக் சவாய் மான்சிங், குருமுக் நிஹல் சிங், சம்பூர்ணஆனந்த் ஆகியோர் மட்டுமே முழுமையாக 5 ஆண்டுகளை ஆளுநர்களாக நிறைவு செய்திருந்தனர். 4-வது ஆளுநராக கல்யாண் சிங் இடம் பெற்றுள்ளார். சம்பூர்ணஆனந்துக்குபின் ராஜஸ்தான் மாநிலத்தில் 40 ஆளுநர்கள் நியமிக்கப்பட்டாலும் ஒருவர்கூட 5 ஆண்டுகளை நிறைவு செய்யவில்லை.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x