Published : 29 Aug 2019 02:20 PM
Last Updated : 29 Aug 2019 02:20 PM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு; மவுனம் கலைத்தார் அப்ரூவர்: ப.சிதம்பரம் குறித்துப் பேசிய இந்திராணி முகர்ஜி 

மும்பை,

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் குறித்து, வழக்கில் தொடர்புடைய அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி முதலீட்டை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கொண்டுவர 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது அனுமதி வழங்கப்பட்டது என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், அப்போது விதிமுறைகளை மீறி முதலீடுகள் வந்ததாகவும், சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்ததாவும் அமலாக்கப் பிரிவும் தனியாக வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு சிபிஐ, அமலாக்கப் பிரிவு தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இதில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குநராக இருந்த இந்திராணி முகர்ஜி இது தொடர்பாக சிபிஐ அமைப்பிடம் அளித்த வாக்கு மூலத்தில், "வெளிநாடுகளில் இருந்த முதலீட்டைப் பெற அனுமதி பெறுவதற்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தைச் சந்தித்தேன். அதற்கு அவர் கைமாறாக, தனது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தில் முதலீடு செய்யும்படி கோரினார். அதன்படி உதவினோம்" எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தைக் கைது செய்ய முடியாமல் சிபிஐ தவித்து வந்தது. இந்த சூழலில் வழக்கில் தொடர்புடைய இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறுவதாக கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ப.சிதம்பரத்தைக் கைது செய்யும் முயற்சியை சிபிஐ தீவிரப்படுத்தியது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த வாரம் டெல்லி உயர் நீதிமன்றம் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுத்தது. இதைத் தொடர்நது நடவடிக்கையை தீவிரப்படுத்திய சிபிஐ 21-ம் தேதி ப.சிதம்பரத்தைக் கைது செய்தது. தற்போது சிபிஐ காவலில் வரும் 30-ம் தேதி வரை சிதம்பரம் இருப்பார்.

இதனிடையே, தனது மகள் ஷீனா போராவைக் கொலை செய்த வழக்கில் இந்திராணி முகர்ஜியும், அவரின் கணவர் பீட்டர் முகர்ஜியும் சிறையில் உள்ளனர். டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று இந்திராணி முகர்ஜி அழைத்து வரப்பட்டார்.

அப்போது அவரிடம் சிதம்பரம் கைது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு இந்திராணி முகர்ஜி கூறுகையில், " ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டது நல்ல செய்திதான். இப்போது அனைத்து தரப்பிலும் சிதம்பரம் குறிவைக்கப்படுகிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீனில் இருக்கும் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x