Published : 27 Aug 2019 12:09 PM
Last Updated : 27 Aug 2019 12:09 PM

‘‘ரிசர்வ் வங்கி பணத்தை திருடுவதால் எந்த பலனும் இல்லை’’ - மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி

ரிசர்வ் வங்கி பணத்தை திருடுவதால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை என மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

நாட்டின் நிதி நிலையை ஸ்திர நிலையில் வைத்திருக்க மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி தனது கையிருப்பை வலுப்படுத்தி வந்துள்ளது. ஆனால், தேவையான அளவை விட அதிகமான உபரி நிதி ரிசர்வ் வங்கி வசம் இருப்பதாகவும், அந்த நிதியை அரசுக்கு வழங்கினால் பயனுள்ள வகையில் திட்டங்களைச் செயல்படுத்த உதவும் எனவும் கூறப்பட்டது. ரிசர்வ் வங்கியின் உபரி நிதி குறித்த விவாதம், நாளடைவில் ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்கும் இடையே மோதலாக மாறியது. இந்த மோதல் பின்னணியில் உர்ஜித் படேல் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு ஆளானார்.

இதையடுத்து ரிசர்வ் வங்கி உபரி நிதியை வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் தனது அறிக்கையைச் சமீபத்தில் ரிசர்வ் வங்கி வாரியக் குழுவிடம் சமர்ப்பித்தது.

இந்நிலையில், நேற்று இது தொடர்பான விவாதத்தில் ரிசர்வ் வங்கி வாரியக்குழு ஈடுபட்டது. பிமல் ஜலான் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கொடுத்துள்ள பரிந்துரைகளின்படி மத்திய அரசுக்கு முதல்கட்ட உபரி நிதியை இந்த நிதி ஆண்டில் வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ரூ.1,76,051 கோடியை மத்திய அரசுக்கு வழங்குவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில் திருத்தப்பட்ட பொருளாதார மூலதன செயல்வரைவின்படி 2018-19 நிதி ஆண்டுக்கான உபரி நிதியாக ரூ.1,23,414 கோடி யும், ரூ.52,637 கோடி கூடுதல் ஒதுக்கீடாகவும் வழங்கப்படு வதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் பணம் கையிருப்பு பணம் மத்திய அரசுக்கு வழங்கப்படுவதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளர்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது
" பிரதமரும், நிதியமைச்சரும், தாங்கள் உருவாக்கிய பொருளாதார சீரழிவை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் திணறுகின்றனர். ரிசர்வ் வங்கியில் இருந்து திருடுவதால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. துப்பாக்கிச்சூட்டு காயத்திற்கு மருந்தகத்தில் இருந்து பேண்டெய்டை திருடி போடுவது போல் உள்ளது இந்த செயல்’’ என ராகுல் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x