Published : 24 Aug 2019 09:52 AM
Last Updated : 24 Aug 2019 09:52 AM

மக்களின் இயல்பு வாழ்க்கையில் தொந்தரவு ஏற்படும்: ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் வர வேண்டாம்: ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் வேண்டுகோள்

ஸ்ரீநகர்,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், அவர்களை மாநிலத்துக்குள் வர வேண்டாம் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குள் வந்து மக்களைச் சந்தித்தால் மெதுவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவரும் மக்களுக்கு தொந்தரவாக அமையக்கூடும் என்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பில் 370 பிரிவை திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வருகிறார்கள் என்று மத்திய அரசு கூறினாலும் அங்கு பெரும்பாலான இடங்களில் இன்னும் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்படவில்லை.

மாநிலத்தை பார்வையிட கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் சென்றபோது ஸ்ரீநகரோடு திருப்பிவிடப்பட்டனர். அதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் நிகழ்வுகளை அறியவும், மக்களுடன் உரையாடவும்
காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஜம்மு-காஷ்மீருக்கு இன்று செல்ல திட்டமிட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆஸாத், ஆனந்த் சர்மா ஆகியோருடன் ராகுலும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, திமுக எம்.பி. திருச்சி சிவா , மனோஜ் ஜா (ராஷ்ட்ரீய ஜனதா தளம்), தினேஷ் திரிவேதி (திரிணமூல் காங்கிரஸ்) ஆகியோர் இன்று ஸ்ரீநகர் செல்கின்றனர். அனுமதி கிடைத்தால் ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்கும் அவர்கள் செல்ல தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

இதற்கிடையே எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வர வேண்டாம் என்று மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ட்விட்டரில் கூறுகையில், " ஜம்மு காஷ்மீர் மக்களை எல்லை தாண்டிய தீவிரவாதம், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் ஆகியோரின் தாக்குதலில் இருந்து மத்திய அரசு காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.மாநிலத்தில் தவறான நடவடிக்கைகள், வதந்திகளை பரப்புவது ஆகிவற்றை கட்டுப்படுத்தி படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கை வந்து கொண்டிருக்கிறது.

இப்போது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் இங்கு வந்து மக்களைச் சந்திப்பதால், இயல்புவாழ்க்கைக்கு திரும்பும் அவர்களுக்கு தொந்தரவுகள் ஏற்படலாம்.

ஆதலால், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அரசுக்கு ஒத்துழைத்து ஸ்ரீநகருக்கு செல்லாமல் தவிர்க்க வேண்டும். அது மற்ற மக்களுக்கும் தேவையான அசவுகரியங்களை ஏற்படுத்தும். இன்னும் பல இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அமைதியை நிலைநாட்டுதல், மனித உயிர்கள் இழப்பை தவிர்த்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மூத்த தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் " எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகத்தின் வேண்டுகோளையும் மீறி எதிர்க்கட்சித் தலைவர்கள் அங்கு செல்லக்கூடும் எனத் தெரிகிறது. 370-வது பிரிவை ரத்து செய்தபின், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு ராகுல் காந்தி செல்வது முதல்முறையாகும்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x