Published : 21 Aug 2019 09:43 AM
Last Updated : 21 Aug 2019 09:43 AM

கைதாகிறாரா ப.சிதம்பரம்? சிபிஐ அதிகாரிகள் தீவிரம்: உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கிடைக்குமா? 2 மணிநேரத்தில் ஆஜராக சட்டத்தில் இடமிருக்கிறதா?

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப்படம்

புதுடெல்லி,

ஐஎன்எக்ஸ் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டதையடுத்து, அவரை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்காக நேற்றிலிருந்து இருமுறை டெல்லியில் உள்ள சிதம்பரம் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றபோதும் அங்கு அவர் இல்லை. இதையடுத்து, நள்ளிரவில் ப.சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய சிஐபி அதிகாரிகள், 2 மணிநேரத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்தனர்.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் கோரியும், அவரை கைது செய்ய தடைவிதிக்கக் கோரியும் அவரின் வழக்கறிஞர்களும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுமான அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல், சல்மான் குர்ஷித் ஆகியோர் மனு அளித்துள்ளார்கள். இந்த மனு இன்று காலை 10.30 மணிக்கு மேல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

ஐஎன்எஸ் மீடியா

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்த போது, கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

தீர்ப்பு ஒத்திவைப்பு

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 2018-ம் ஆண்டில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யாமல் இருப்பதற்கு முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுனில் கவுர், கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி, தீர்ப்பை ஒத்திவைத்தார்.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி

இந்நிலையில் நீதிபதி கவுர் நேற்று தீர்ப்பளித்தார். அதில் " இந்த வழக்கில் முக்கிய சூத்திரதாரியாக ப.சிதம்பரம் இருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவருகிறது. ஆதலால், அவருக்கு முன்ஜாமீன் வழங்க இயலாது" என்று தெரிவித்தார்.
இதையடுத்து உடனடியாக ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித் ஆகியோர் ஆலோசனை நடத்தி உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்தவழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுக்க ப.சிதம்பரம் வழக்கறிஞர்கள் கோரினார்கள். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் வேலைநேரம் முடிந்ததால், இந்த மனுவின் விசாரணை இன்று காலை எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ப.சிதம்பரம் இல்லம்

இதற்கிடையே டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்த சில மணிநேரங்களில் சிபிஐ அதிகாரிகள் குழு ஜோக்பார்க் பகுதியில் உள்ள ப.சிதம்பரம் இல்லத்துக்கு விரைந்தனர். அங்கு அவர் இல்லை எனத்தெரியவந்ததையடுத்து அவர்கள் புறப்பட்டனர். இவர்கள் வந்து சென்றதும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வந்து ப.சிதம்பரம் குறித்து விசாரித்துச் சென்றனர்.
அதன்பின் நள்ளிரவில் சிபிஐ அதிகாரிகள் குழு ப.சிதம்பரம் இல்லத்துக்கு வந்தனர். அப்போது அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், சிதம்பரம் வீட்டில் இல்லை எனத் தெரிவித்தனர். இதையடுத்து, ப.சிதம்பர் வீட்டில் சிபிஐ. அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றனர்.

நள்ளிரவில் நோட்டீஸ்

அந்த நோட்டீஸில் " ஐஎன்எக்ஸ் வழக்கில் சில உண்மைகளையும், சில விவரங்களையும் நீங்கள் எங்களிடம் தெரிவிக்க வேண்டியது இருக்கிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரி என்ற முறையில் இந்த வழக்கில் இன்னும் 2மணிநேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் " என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால், அடுத்த 2 மணிநேரத்தில் ப.சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து இன்று காலை மீண்டும் ப.சிதம்பரம் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். அங்கு அவர் இல்லை என்பதால் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்திவிட்டு புறப்பட்டனர். தற்போது ப.சிதம்பரம் எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

சட்டத்தில் இடம் இருக்கா?

ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர் அர்ஷ்தீப் சிங் குராணா கூறுகையில், " எந்த சட்டத்தின் அடிப்படையில் சிபிஐ 2மணி நேரத்தில் ப.சிதம்பரத்தை நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறுகிறது. சட்டம் வழங்கிய உரிமைகள் அடிப்படையில் தன்னை கைதில் இருந்து காக்க எனது கட்சிக்காரருக்கு உரிமை இருக்கிறது. அதனால் உச்ச நீதிமன்றத்தை நாடி முன்ஜாமீன் கோரியிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் விசாரணையின் போது நேரில்ஆஜராவாரா அல்லது ஆஜராகமாட்டாரா எனும் விவரங்களும் தெரியவில்லை.

கைது தடுக்கப்படுமா

உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவுடன், அவரை எப்படியாவது கைது நடவடிக்கையில் இருந்து காக்க வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் போராடி வருகின்றனர்.

ஏனென்றால், இதற்கு முன் சிபிஐ அனுப்பிய அனைத்து சம்மன்களுக்கும் ப.சிதம்பரம் தவறாமல் ஆஜராகியுள்ளார். ஆனால், உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து மேல்முறையீட்டுக்கு 3 நாட்கள் அவகாசம் அளித்தநிலையில், ப.சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிஓடக் கூடிய மனிதர் அல்ல. சமூகத்தில் மதிப்புக்குரிய இடத்தில் இருப்பவர். அவ்வாறு இருக்கும்போது, ஏன் சிபிஐ கைது செய்ய அவசரம் காட்டுகிறது என்ற வாதத்தை காங்கிரஸ் வழக்கறிஞர்கள் முன்வைத்து வாதிடலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும், முன்ஜாமீன் வழக்கில் விசாரணை முடிந்து 7 மாதங்கள் கழித்து இப்போது தீர்ப்பளித்துள்ளானர். இந்த தாமதம் தேவையில்லை, அதுமட்டுமல்லாமல் தீர்ப்பும் மாலையில் வழங்கப்பட்டு, மேல்முறையீட்டுக்கான காலக்கெடுவும் குறைவாக இருக்கிறது என்ற வாதத்தையும் முன்வைப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிபிஐ தீவிரம்

அதேசமயம், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஐஎன்எக்ஸ் வழக்கில் குற்றம்நடப்பதற்கு முக்கியமான ஆதரவாக இருந்துள்ளார் என்று சிதம்பரத்தை குறிப்பிட்டுள்ளது. அதனால் ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த சூழலில் இன்னும் கைது நடவடிக்கையை தாமதப்படுத்தினால், சட்டநுணுக்கங்கள் உதவியுடன் ப.சிதம்பரம் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கக் கூடும் என்பதால் சிபிஐ கைது செய்யதீவிரம் காட்டுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திராணி முகர்ஜி

மேலும், ஐஎன்எக்ஸ் வழக்கில் முக்கியமானவராக இருக்கும் இந்திராணி முகர்ஜி, தன்னுடைய வாக்குமூலத்தில் அரசின் தரப்பு சாட்சியாளராக மாறுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால், ப.சிதம்பரத்துக்கு எதிரான ஆதாரங்களை சிபிஐ வலுவாக சேகரித்து வருகிறது.

இந்த சூழலில் ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை விசாரிப்பதில் தாமதம் செய்தாலோ அல்லது, வழங்க மறுத்தாலோ சிபிஐ கைது செய்யக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x