Published : 20 Aug 2019 01:09 PM
Last Updated : 20 Aug 2019 01:09 PM

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: அமைச்சர் பதவி கிடைக்காத பாஜக எம்எல்ஏக்கள் அதிருப்தி

பெங்களூரு

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காத பாஜக மூத்த எம்எல்ஏக்கள் விழாவைப் புறக்கணித்தனர்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் வாஜூபாய் வாலா 17 பேருக்கு அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பாஜக மூத்த தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டார், ஈஸ்வரப்பா, சிடி ரவி, ஸ்ரீராமுலு, பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்ட 17 பேரில் 16 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ்.

இவர்களைத் தவிர லக்ஷமண் சங்கப்பா, அசோகா, ஸ்ரீனிவாஸ் பூஜாரி, கோவிந்த் கரஜோல், அஸ்வத் நாராயணன், மதுசாமி, சிசி பாட்டில், பிரபு சவுகான், சசிகலா ஜோலே, சோமண்ணா, சுரேஷ்குமார் ஆகியோரும் அமைச்சர்கள் ஆக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காத பாஜக எம்எல்ஏக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சித்ரதுர்கா தொகுதியில் இருந்து பாஜக சார்பில் 4 முறை எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திப்பா ரெட்டி தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாததால் அவரது ஆதரவாளர்கள் பதவியேற்பு விழாவின் போது பெங்களூரு காந்தி சர்க்கில் பகுதியில் போராட்டம் நடத்தினர். திப்பா ரெட்டிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர். அதுபோலவே சுலியா தொகுதியில் பாஜக எம்எல்ஏ அங்காராவும் தனக்கு அமைச்சர் பதவி வழங்காததால் அதிருப்தி அடைந்துள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரான பவராஜ் பாட்டில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. அதுபோலவே 8 முறை எம்எல்ஏவான உமேஷ் காட்டியும் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x