Published : 10 Aug 2019 06:16 PM
Last Updated : 10 Aug 2019 06:16 PM
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை நிலை ஆளுநராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவதாகக் கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்ட கேரள பாஜகவின் பொதுச் செயலாளர் எம்.கணேசன் கட்சி மேலிடத்தின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார்.
முன்னதாக இன்று (சனிக்கிழமை) காலை கணேசனின் ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டு இவர்தான் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ட்வீட் வைரலானது. இந்நிலையில், இதனை கவனித்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் அந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தாமல் எப்படி வெளியிடலாம் எனக் கடிந்திருந்தார். சிறிது நேரத்தில் கணேசன் அந்த ட்வீட்டை நீக்கினார்.
அதற்குள் சில ஊடகங்களில் அது செய்தியாகிருந்தது. கடந்த சில மாதங்களாகவே கேரள பாஜகவுக்குள் சமூக வலைதளங்களைக் கையாள்வது தொடர்பாக சிக்கல் நிலவி வருகிறது.
உறுப்பினர்கள், உயர் பொறுப்பிலிருப்பவர்கள் அவ்வப்போது இதுபோன்ற ட்வீட்களைப் பதிவு செய்வதால் கட்சித் தலைமை தர்மசங்கடமான சூழலில் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT