Published : 09 Aug 2019 06:05 PM
Last Updated : 09 Aug 2019 06:05 PM
அடிப்படை உரிமைகள் மத்திய அரசால் நசுக்கப்படுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயிரக்கணக்கில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இது குறித்து சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “நானும், டி.ராஜாவும் காஷ்மீர் விமான நிலையத்திலிருந்து வெளியேறி எங்கள் தோழர்களைக் காண அனுமதி மறுக்கப்பட்டோம். விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்படுவது ஜனநாயக உரிமை மீதான வன்முறை. மத்திய அரசால் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். ஒற்றுமையுடன் காஷ்மீர் மக்களுக்கு துணை நிற்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT