Published : 06 Aug 2019 12:25 PM
Last Updated : 06 Aug 2019 12:25 PM
புதுடெல்லி
ஜம்மு - காஷ்மீர் என்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சீனா வசம் உள்ள காஷ்மீரின் பகுதிகள் இணைந்தது தான் என உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் உறுதிபட தெரிவித்தார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்ப பெறும் தீர்மானம் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேறியது.
காஷ்மீரை, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 125 எம்.பி.க்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. 61 எம்.பி.க்கள் எதிர்த்து வாக் களித்தனர். ஒரு எம்.பி. வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதைத் தொடர்ந்து காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது.
காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன. இந்தநிலையில் மக்களவையில் இன்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை திரும்பப் பெறும் மசோதா உள்ளிட்ட மசோதாக்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்து பேசினார்.
அப்போது காஷ்மீர் பிரச்சினை ஐ.நா.விடம் உள்ள நிலையில் மத்திய அரசு அவசரப்படுவது ஏன் என காங்கிரஸ் எம்.பி. ஆதிரஞ்சன் சவுத்திரி கேள்வி எழுப்பினார். மேலும் அப்படி என்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நிலை என்ன என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமித் ஷா கூறியதாவது:
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஜம்மு - காஷ்மீர் குறித்து நான் குறிப்பிடும்போது அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சீன வசம் உள்ள காஷ்மீரின் பகுதிகளை உள்ளடக்கியதே. யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்ற லடாக் மக்களின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT