Published : 05 Aug 2019 10:38 AM
Last Updated : 05 Aug 2019 10:38 AM

காஷ்மீர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் அமித் ஷா

புதுடெல்லி

உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் காலை 11 மணியளவிலும், மக்களவையில் 12 மணியளவிலும் உரையாற்றுகிறார். காஷ்மீர் நிலவரம் தொடர்பாக அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒருவாரமாகவே ஏராளமான பாதுகாப்புப் படையினரை மத்திய அரசு குவித்து வருகிறது. குடியரசுத் தலைவர் ஆட்சியில் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இருந்து வரும் சூழலில் அங்கு தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக அமர்நாத் யாத்திரையில் இருந்த பயணிகள் தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைச் சட்டம் 35ஏ பிரிவை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, இண்டெர்நெட் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அசாதாரண சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன. 

இந்தநிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளன. இதையடுத்து இன்று காலை பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து மத்திய அரசு சார்பில் அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. அதேசமயம் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை 11:00 மணியளவில் நாடாளுமன்ற மாநிலங்களவையில்  உரையாற்றுகிறார். அதுபோலவே மக்களவையில் 12:00 மணிக்கு அவர் உரையாற்றுகிறார்.

அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைச் சட்டம் 35ஏ பிரிவை ரத்து செய்வது குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா அல்லது பொதுவான காஷ்மீர் நிலவரம் குறித்து பேசுவாரா என்பது பற்றி உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x