Published : 03 Aug 2019 09:55 AM
Last Updated : 03 Aug 2019 09:55 AM

பெங்களூருவில் ஹெல்மெட் அணிந்தவருக்கு மட்டுமே பெட்ரோல்; திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது

பெங்களூரு

பெங்களூருவில் ஹெல்மெட் அணிந்தவருக்கு மட்டுமே பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என போக்குவரத்து போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். வருகிற திங்கள் கிழமை முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஹரிசேகரன் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூருவில் அதிகரித்துவரும் விபத்துகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இரு சக்கரவாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் விபத்துகளை முழுமையாக குறைக்க முடியவில்லை. தற்போது விபத்துகளை தவிர்க்கும் வகையில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூருவில் உள்ள பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், ஷெல் உள்ளிட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

அதில், ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது என போலீஸார் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனை பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் ஏற்றுக்கொண்டனர். இதுகுறித்து அனைத்து பெட்ரோல் பங்க்குகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகிற 5-ம் தேதி முதல் பெங்களூருவில் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x