Published : 01 Aug 2019 12:09 PM
Last Updated : 01 Aug 2019 12:09 PM
புதுடெல்லி
ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 9--ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3500 கோடி முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (எஐபிபி) அனுமதி கோரியது. இதில் ப.சிதம்பரம் விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாகவும் இதன் மூலம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி உள்ளிடோருக்கு எதிராக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்த வழக்குகளில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தியை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இருவரையும் கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. முன்னதாக இந்த வழக்கில் விசாரணை முடிவடையவில்லை என சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீனை நீட்டித்து நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவு பிறப்பித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT