Published : 29 Jul 2019 09:19 PM
Last Updated : 29 Jul 2019 09:19 PM

நீட் தேர்வை தமிழகம் எதிர்ப்பது ஏன்? -மக்களவையில் திமுக எம்பி டாக்டர்.செந்தில்குமார் விளக்கம்

புதுடெல்லி: நீட் தேர்வை தமிழகம் எதிர்ப்பது ஏன் என திமுக எம்.பியான டாக்டர்.எஸ்.செந்தில்குமார் மக்களவையில் விளக்கினார். அப்போது அவர், அதிமுக அரசின் பயிற்சியில் ஒரு மாணவர் கூட நீட்டுக்கு தேர்வாகவில்லை எனவும் தெரிவித்தார்.

இது குறித்து டாக்டர்.செந்தில்குமார் இன்று மக்களவையில் பேசியதாவது: நாங்கள் சமூக மற்றும் சுகாதார குறியீடுகளில் முன்னோடியாக இருப்பதால் நாங்கள் இதனை பற்றி பேச தகுதியானவர்களாக இருக்கின்றோம். பிரிவு 15 உட்பிரிவு ஐந்து நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வை பற்றியதாகும். ஏன் தமிழகம் இதனை எதிர்க்கின்றது.

நீட்டுக்கு முன்னால் இருந்தவை பற்றியும் அதற்கு பிந்தையவையும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக என்னிடம் இருக்கின்றது. நீட்டுக்கு முன்பாக மாநில பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநில அரசின் கீழ் உள்ள தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களில், 2500 இடங்களில் அந்த பள்ளிகளில் இருந்து சென்றவர்கள் 1500.

ஆனால் இப்போது என்ன நடந்துள்ளது? அதிமுக அரசாங்கத்தின் மூலம் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் இருந்து ஒரு மாணவர் கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புக்கு செல்லவில்லை.

பயிற்சிப்பள்ளிகளுக்கான செலவை ஊரக பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களால் செய்ய முடிவதில்லை. ஊரக பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு செல்ல வேண்டும் என்பதனாலேயே எங்கள் தலைவர் கலைஞர் நுழைவுத் தேர்வு முறைகளை ரத்து செய்தார்.

நாம் ஏன் அனிதா, பிரதீபா உள்ளிட்ட ஏழு மாணவர்களை இழந்தோம். மாநில அரசின் மதிப்பெண்களை கருத்தில் கொண்டிருந்தால் இந்நேரம் அவர்கள் மருத்துவ படிப்பின் இரண்டாம் ஆண்டில் படித்துக்கொண்டிருப்பார்கள். அதனால்தான் நாங்கள் இதனை கடுமையாக எதிர்க்கின்றோம்.

8 ஆம் ஷரத்தின் 2 ஆம் பிரிவில் நீங்கள் ஆட்சியாளர்களை கொண்டுவருகின்றீர்கள். ஒரே ஒரு பிரிவில் மட்டும்தான் ஆட்சியாளர்களுக்கு வழியில்லை. அது அறுவை சிகிச்சை செய்வது. தயவு செய்து அதனையும் சேர்த்துவிடுங்கள்.

தமிழ்நாட்டின் குரல் இந்த அவையில் ஒலிக்க வேண்டும். நான் வேறு எங்கு சென்று கருத்துக்களை சொல்வது? ஆட்சியாளர்கள் தான் கல்விக்கான ஒழுங்குவிதிகளை அமைக்க வேண்டும் என்றால் அதன் பயன் என்ன?

ஆயுஷ் இணைப்பு கோர்ஸை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? நீங்கள் இடைநிலை பயிற்சியாளர்களை கொண்டுவந்துள்ளீர்கள். அலோபதியில் சிறிய பாரசிட்டாமல் மருந்தை கூட நர்சிங் முடித்தவர்கள் பரிந்துரைக்க உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்காது.

இதில் பல பக்கவிளைவுகள் உண்டு. அரசாங்கம் பல தீங்கை செய்கின்றது. நமக்கு பாராமருத்துவர்களுக்கான பற்றாக்குறை உண்டு. நான் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக இருந்த முறையை அறிவுறுத்துகின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-ஆர்.ஷபிமுன்னா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x