Published : 26 Jul 2019 05:47 PM
Last Updated : 26 Jul 2019 05:47 PM

‘குமாரசாமி உத்தரவுகளை நிறுத்தி வையுங்கள்’ - பதவியேற்கும் முன்பே செயலாளர்களுக்கு எடியூரப்பா அறிவுறுத்தல்

 

பெங்களூரு

கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமி அரசு அண்மையில் வெளியிட்ட அனைத்து ஆணைகளையும் நிறுத்தி வைக்குமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கும் முதல்வராக பதவியேற்கவுள்ள எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கர்நாடக்தில் ஆளும் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது, 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவை விலக்கியதால் ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. 

இதையடுத்து, முதல்வராக இருந்த குமாரசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்ததால், ஆட்சி கவிழ்ந்தது.

கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை இன்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரினார். இன்று மாலை 6 மணிக்கு அவர் முதல்வராக பதவியேற்கிறார். எனினும் பதவியேற்கும் முன்பாக அவர் காபந்து முதல்வர் குமாரசாமி பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்தாமல் நிறுத்தி வைக்குமாறு  தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில் கர்நாடக தலைமைச் செயலாளர் விஜயபாஸ்கர் முதன்மை செயலாளர் மற்றும் அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ‘‘கர்நாடகாவில் காபந்து முதல்வராக உள்ள குமாரசாமி இந்த மாதத்தில் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். பெரும்பான்மை இல்லாமல் அவர் எடுத்த எந்த முடிவையும் செயல்படுத்தக் கூடாது என புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள எடியூரப்பா அறிவுறுத்தியுள்ளார். பதவி உயர்வு, இடமாற்றம், புதிய திட்டங்கள் உட்பட எந்த முடிவாக இருந்தாலும் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும்’’ என அதில் தெரிவித்துள்ளார். 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x