Published : 25 Jul 2019 11:33 AM
Last Updated : 25 Jul 2019 11:33 AM

மேற்கு வங்கத்தில் 1.5 கிலோ நகைகளையும் நாணயங்களையும் விழுங்கிய பெண்

மேற்கு வங்கத்தில் 26 வயதுப் பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து 1.5 கிலோ அளவில் நகைகளையும், நாணயங்களையும் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியில் எடுத்துள்ளனர்.

பிர்பம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் பெண் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவர் மனநலம் குன்றியவர் என்று கூறப்படுகிறது.  அவரது வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சைமூலம் 1.5 கிலோ அளவில் நகைகளும், ரூபாய் நாணயங்களும் எடுக்கப்பட்டது.

இதுகுறித்து அறுவை சிகிச்சை பிரிவுத் தலைவர் சித்தார்த்தா பிஸ்வாஸ் தெரிவிக்கையில், ''சென்ற வாரம் வயிற்று வலியால் உடல்நிலை மோசமாயிருந்த 26 வயதுப் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதனை செய்து பார்த்ததில் அவர் வயிற்றுக்குள் ரூ.5 மற்றும் ரூ.10 ரூபாய் நாணயங்கள் மற்றும் சங்கிலிகள், மூக்கு மோதிரங்கள், காதணிகள், வளையல்கள், கால் கொலுசு, பிரேஸ்லெட் மற்றும் கைக்கடிகாரம் ஆகியவை இருந்தன. 

அந்தப் பெண்ணுக்கு நேற்று (புதன்கிழமை) அறுவை சிகிச்சை செய்தோம். அவரது வயிற்றிலிருந்த அந்தப் பொருட்களை வெளியே எடுத்தோம். ஆபரணங்கள் பெரும்பாலும் தாமிரம் மற்றும் பித்தளைகளால் செய்யப்பட்டவையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவற்றில் சில தங்க நகைகளும் இருந்தன'' என்றார்.

இதுகுறித்து பெண்ணின் தாயார் கூறுகையில், ''மார்கிராம் கிராமத்தில் உள்ள எங்கள் வீட்டிலிருந்து அடிக்கடி ஆபரணங்கள் காணாமல் போவதைக் கவனித்தோம். ஆனால், நாங்கள் எங்கள் மகளிடம் அதைப்பற்றி கேள்வி எழுப்பிய போதெல்லாம், அவர் அழ ஆரம்பித்து விடுவார். என் மகள் மனநிலை சரியில்லாதவர். கடந்த சில நாட்களாகவே சாப்பாட்டை ஒதுக்க ஆரம்பித்தார். 

அவர் இரண்டு மாதங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். உண்மையான பிரச்சினை என்னவென்று தெரியாமல் நாங்கள் அவரை பல்வேறு தனியார் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று காட்டினோம். ஆனாலும் சரியாகவில்லை, கடைசியாக இங்கு அழைத்து வந்தோம். 

மருத்துவர்கள் ஒருவாரம் பல்வேறு சோதனைகளைச் செய்தனர். அதன்பின்பு அவரது வயிற்றில் நாணயங்களும், நகைகளும் இருந்ததை மருத்துவர்கள் தெரிவித்தனர். இவ்வளவு நாணயங்களும் எனது சகோதரனின் கடையிலிருந்துதான் எங்கள் மகள் எடுத்திருக்கிறார். எப்படி இவ்வளவு நகைகளையும் நாணயங்களையும் அவர் விழுங்கினார் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது'' என்று தெரிவித்தார். 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x